திருமாவளவன் வெளியிட குஷ்பு பெற்றுக்கொள்கிறார்

திருமாவளவன் வெளியிட குஷ்பு பெற்றுக்கொள்கிறார்

Leave a Comment

திருமா – குஷ்பு சமாதானம்: கருத்து மோதல் களமாக மாறிய ஆழி நூல் வெளியீட்டு விழா

திருமா – குஷ்பு சமாதானம்: கருத்து மோதல் களமாக மாறிய ஆழி நூல் வெளியீட்டு விழா  

ஆழி பதிப்பகம் வெளியிட்ட எட்டு நூல்களுக்கான வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 6) சென்னையில் நடந்தது. ஒரு வழக்கமான புத்தக வெளியீட்டு விழாவாக நடந்து முடிந்திருக்க வேண்டிய எங்கள் ஆழி பதிப்பகத்தின் நூல் அறிமுக விழா நேற்று ஒரு மாபெரும் கருத்து மோதல் களமாக மாறியது. ஆனால் அதன் இறுதியில் அது சமாதான சமரசமாக முடிந்தது என்பதும் ஓர் ஆறுதல். 

இதற்கு காரணம் இரண்டு வெவ்வேறு நூல்களை வெளியிடுவதற்காக மீடியாவில் எதிரெதிராக நிறுத்தப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் நடிகை குஷ்புவும் முதல் முறையாக ஒரே மேடையில் தோன்றியது தான். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய தீண்டப்படாத நூல்கள் என்ற புத்தகத்தை வெளியிட திருமாவளவன் வந்திருந்தார். இந்தியா டுடே எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜனின் எசப்பாட்டு என்ற நூலை கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட குஷ்பு பெற்றுக்கொண்டார்.  இரண்டு அமர்வுகளாக நடந்த இந்த விழாவின் முதல் அமர்வில் காஷ்மீர், கொதிக்கும் பூமி, முட்டம், ரஷோமான் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. சந்திரன் எழுதிய காஷ்மீர் என்கிற மிகப்பெரிய நூலை மண்மொழி இதழின் ஆசிரியர் இராசேந்திர சோழன் வெளியிட, மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அஜிதா பெற்றுக்கொண்டார். ரஷோமான் திரைக்கதையை இயக்குநர் நாகா வெளியிட, மின்வெளி நிறுவனத்தலைவர் பி. தனபால் பெற்றுக்கொண்டார். ஆதி வள்ளியப்பன் எழுதிய கொதிக்கும் பூமி என்கிற குளோபல் வார்மிங் பற்றிய முதல் தமிழ் நூலை வானிலைத்துறை இயக்குநர் திரு எஸ்ஆர் ரமணன் வெளியிட, சென்னை ஐஐடி பேராசிரியர் சுதீர் செல்லராஜன் பெற்றுக்கொண்டார்.  வலைப்பதிவர் சிறில் அலெக்சின் நூலை ஆனந்த் நடராஜன் வெளியிட, ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் அமர்வில் கல்யாண்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் நூல் அச்சுவடிவிலும் ஒலிப்புத்தகமாகவும் ஒரே சேர வெளியிடப்பட்டது. வெளியிடுவதற்கு வரவேண்டியிருந்த எழுத்தாளர் வண்ணநிலவன் வர இயலாத நிலையில், கவிஞர் அறிவுமதி அதை வெளியிட, கற்றது தமிழ் பட இயக்குநர் ராம் பெற்றுக்கொண்டார். பவுத்த அய்யனாரின் மேன்ஷன் கவிதைகள் நூலின் மறுபதிப்பை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட எழுத்தாளர் அருண் வெற்றி வேல் பெற்றுக்கொண்டார்.  அதன் பிறகு இரண்டு நூல்கள் வெளியிடப்படவேண்டிய நிலையில், திருமாவளவன் வந்தார். அப்போது மேடையில் முன்னதாகவே கவிஞர் கனிமொழி, குஷ்பு, தமிழச்சி தங்கபாண்டியன், கல்யாண்ஜி, அறிவுமதி உள்பட்டோர் அமர்ந்திருந்தனர். 

திருமாவளவன்  மேடைக்கு வரும் போது மேடையிலிருந்த அனைவரும் அவரை எழுந்து வரவேற்றபோது, அப்போது பேசிக்கொண்டிருந்த தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சையே தொடர்ந்து குஷ்பு கவனித்துக் கொண்டிருந்தார். திருமாவை அவர் பார்க்கவேண்டாம் என தவிர்க்கவிரும்பினாரா அல்லது உள்ளபடியே தமிழச்சியின் பேச்சில் ஆழ்ந்துவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், அந்த context இல் அவர் பார்ப்பதைத் தவிர்க்கவிரும்பியிருப்பதாகவே அனைவருக்கும் பட்டது. ஆனால் பிறகு எசப்பாட்டு நூலைப் பெற்றுக்கொண்ட பிறகு பேசிய குஷ்பு, தான் திட்டமிட்டு அவ்வாறு செய்யவில்லை என்று கூறி, இப்போது வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசும்போதே திரும்பி ஒரு வணக்கம் வைத்தார். அந்த செயலும் அதனூடாக வெளிப்பட்ட உடல்மொழியும் மீண்டும் சிக்கலானது. (திருமணத்துக்கு முந்தைய பாலுறவைக் குறித்த இந்தியா டுடே கருத்துக்கணிப்பைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மோதல் நீங்கள் எல்லாம் அறிந்ததே. அப்போது திருமாவளவனும் குஷ்பு எதிரெதிர் அணியில் இருந்ததாக மீடியாவில் சித்தரிக்கப்பட்டது). 

இதைத் தொடர்ந்து அந்த மோதல் குறித்து ஆனந்த் நடராஜனின் எசப்பாட்டு நூலிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டி குஷ்பு படித்தார். குஷ்புவின் பேச்சில் அந்த காலகட்டத்தில் அவர் எதிர்கொண்ட வலுவான எதிர்ப்பினால் அடைந்த காயம் இன்னும் ஆறவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. இது அவையில் சற்று வெப்பத்தைக் கூட்டிவிட்டது. குஷ்பு பேசிய பிறகு, அடுத்த நூல் வெளியிடுவதற்கு முன்பு, அறிவுமதி தானாகவே வந்து, குஷ்புவின் பேச்சுக்கு மறுமொழி கொடுத்தார்.

ஒரே மேடையில் இருவரும் தோன்றியிருப்பது ஒரு ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம் என்று கூறிய அவர், குஷ்புவின் செயல்பாடு குறித்து அதிருப்தியை வெளியிட்டார். தனது தம்பி சுந்தர்சியின் மனைவி என்கிற வகையில் அவர் தனக்கு வேண்டப்பட்டவர்தான் என்று கூறிய அறிவுமதி தனது கருத்தை அவர் வெளியிடும் முறை குறித்து விமர்சித்தார். ஆனால் தொடர்ந்து அவர் பேசிய சில கருத்துகள் – குறிப்பாக தங்கர்பச்சான் விஷயத்தில் குஷ்பு எதிர்கொண்ட விதம் குறித்து – குஷ்புவை வெகுண்டெழச் செய்தது.

தனது கருத்தில் எந்த தவறும் இல்லை என்று அவர் ஆவேசமாக பேச, பார்வையாளர்களின் ஒரு பகுதியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சில நிமிடங்கள் நாங்கள் ஆடிப்போய்விட்டோம்.  

அந்த தருணத்தில்தான் ஒரு பொறுப்பான தலைவருக்கே உரிய பாணியில் திருமாவளவன் நேரடியாக மைக் அருகில் வந்தார். எதிர் முழக்கம் இட்டவர்களை விரைவில் அமைதியாக்கிய அவர் தொடர்ந்து பேசிய பேச்சுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சும் கூட. அரங்கமே உறைந்துபோகும்படியாக இருந்தது அவர் பேசிய பேச்சு. கற்பு குறித்தும் கருத்துரிமை குறித்தும் அவர் தனது கருத்துகளை விளக்கினார். எந்த கட்டத்திலும் குஷ்புவுக்கு எதிராக தானோ தனது அமைப்பினரோ போராவில்லை என்றும் விதிவிலக்காக சென்னையில் அப்போது குஷ்புவுக்கு எதிராக நடந்த ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தையும் தான் ஏற்வில்லை என்பதையும் வெளிப்படுத்தினார். மீடியாவும் குஷ்புவின் எதிரிகளும் தான் இந்த பிரச்னையை பெரிதாக்கினார்களே ஒழிய, தாங்கள் அல்ல என்றார். இந்த பிரச்னையை குஷ்பு கையாண்ட விதமும் அதற்கு ஒரு காரணம் என்பதை அவர் தன் பேச்சினூடாக புரியவைக்க முயன்றார். பெண்ணுரிமை, கற்பு குறித்த கருத்துகளில் தான் குஷ்புவின் நிலைப்பாட்டிலிருந்து பெரிதும் முரண்பட்டு நிற்கவில்லை என்று பேசிய திருமா தனக்கும் குஷ்புவுக்கும் இடையிலான முரண்பாடு நட்பு முரண்பாடுதானே ஒழிய பகைமுரண்பாடு அல்ல என்று கூறினார். உண்மையில், எந்த தருணத்திலும் தான் குஷ்புவை எதிர்த்து எந்த அரசியலையும் செய்யவில்லை என்கிற அவரது பேச்சு குஷ்பு விவகாரத்தில் திருமா சரிவர நடந்துகொள்ளவில்லை என்று எழும்பியிருந்த ஒரு பிம்பத்தை உடைத்தெறிவதாகத் தோன்றியது. இந்த வகையில் அவரது பேச்சு திருமாவளவனின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நற்சேதியாகத்தான் இருந்தது என்பதை அதன் பிறகு எனக்கு தொடர்ந்து வரும் தொலைபேசி பேச்சுகள் புலப்படுத்தின. 

இங்கே நானும் ஒரு தன்னிலை விளக்கம் தரவேண்டியிருக்கிறது. திட்டமிட்டு, விளம்பர நோக்கோடு இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனையும் குஷ்புவையும் ஒரே சேர நாங்கள் அழைத்ததாக சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்.  நடந்தது இதுதான். இந்த நிகழ்ச்சிக்காக விருந்தினர்களை முடிவு செய்யும் பொறுப்பை நான் அந்தந்த நூலுக்கான ஆசிரியர்களிடமே விட்டிருந்தேன். நடராஜன் முதலில் நடிகர் சிவக்குமாரையும் பிறகு சத்யராஜையும் வெளியிட அழைக்க முயன்றார். நேரமின்மை காரணமாக அது நடக்காமல் போனது. பிறகு குஷ்புவைத் தொடர்பு கொண்ட போது அவர் ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட அதே நாளில் அதே மணி நேரங்களில்தான் ஸ்டாலின் ராஜாங்கமும் திருமாவளவனின் ஒப்புதலைப் பெற்றார். தீடிரென்று திருமாவளவனும் குஷ்புவும் ஒரே மேடையில் தோன்றும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, நானும் நடராஜனும் பேசிக்கொண்டிருந்தபோது, சங்கடமான சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டது. குஷ்புவிடம் அவர் தொடர்பு கொண்டு திருமாவளவன் வருவதைப் பற்றி சொன்னபோது, அவர் மீது தனக்கு வருத்தமில்லை என்றார் குஷ்பு. திருமாவளவனிடம் குஷ்பு வருவது குறித்து பேசுவதற்கு நான் முழுமையாக முயற்சி செய்யவில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அவரிடம் அழைப்பிதழை அளித்தபோது, அவர் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. உண்மையில் அவருக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்பதுதான் அவர் பேச்சினூடாக வெளிவந்த தகவலும். மேடையில் திருமாவின் பேச்சுக்கு பின், குஷ்பும் தணிந்திருந்திருந்ததாகவே பட்டது.

மேடையில் மீண்டும் கனிமொழி, தமிழச்சி, திருமாவளவன், குஷ்பு ஆகியோர் புகைப்படக்காரர்கள் சூழ தங்களுக்குள் பேசிக்கொண்டபோது, திருமாவளவனுக்கு வணக்கம் சொன்ன விதம் நக்கல் செய்வதல்ல என்றும் அது நோக்கமே அல்ல என்று மீண்டும் வலியுறுத்தி கூறினார் குஷ்பு. திருமாவளவனும் கூலாக அதை எதிர்கொண்டார் என்றே தெரிந்தது. இந்த களேபரத்தில் நூல் வெளியிடும் விதம் முற்றிலும் மாறிப்போனது. கடைசியில், திருமாவளவன் நூலை வெளிக்காட்ட குஷ்பு அதைப் பெற்றுக்கொண்டார்! 

இப்போது காலையில் பார்த்தால் மீடியாக்காரர்கள் தங்கள் வேலையை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிகிறது. குஷ்பு பாதியில் வெளியேறியதாக தினத்தந்தி எழுதியிருக்கிறது. முன்னதாகவே அவர் நிகழ்ச்சியின் இடையில் போவதாகத் தான் இருந்தது என்றாலும், இறுதிவரை அவர் நிகழ்ச்சியில் மேடையிலேயே இருந்தார்.  அதி அவசரத்தில் இந்த பதிவை நான் எழுதுகிறேன். மேலதிக விவரங்களோடு மேலும் எழுதுகிறேன். புகைப்படங்களுடன்.  

Comments (7)

BhashaIndia.com இன் Localization குளறுபடி

bhashaindia.jpg

Localization – இது பற்றி மென்பொருள் உலகில் கடந்த ஒரு பதிற்றாண்டாக நிறைய பேச்சு. எல்லா நாடுகளையும் மதித்து கலாச்சாரங்களையும் காப்பாற்றி மொழிகளையும் பேணி பல்கலாச்சார உலகைக் கொண்டாடுவோம் என்று உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் சொல்லிக்கொண்டுவருகிறார்கள். சொல்லப்போனால் நிறைய செய்தும் வருகிறார்கள். மைக்ரோசாஃப்ட்,  சன், நோகியா, கூகிள், ராய்ட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் Localization என்கிற இந்த உள்ளூர்மயமாக்க முறை மூலம் அந்தந்த நாடுகளின் சந்தைகளிலும் மேலும் பரவிச்செல்ல வழிவகைச் செய்துகொள்கிறார்கள்.

இந்த உள்ளூர்மயமாக்கமும் (அதற்கு பின்னால் இருக்கிற உலகமயமாக்கமும்) பல சிறிய நாடுகளில், கலாச்சாரங்களில், மொழிச் சமூகங்களில் புத்துணர்வை ஊட்டியிருப்பதும் உண்மை. இந்தியாவிலும் பல ஆசிய, ஆஃபிரிக்க நாடுகளிலும் இணையத்திலும் கணிப்பொறியிலும் பல மொழிகள் இடம்பெற யூனிக்கோடு போன்ற நுட்பங்கள்  உதவியிருக்கின்றன. 

தமிழ், அரபு, வியத்நாம், கசாக் என பல மொழியினர்கள் தங்கள் தங்கள் இலக்கிய, கலாச்சார பதிவுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இந்த உள்ளூர்மயமாக்கம் உதவியிருக்கிறது. முதல் முறையாக இரண்டு நாளுக்கு முன் என் மனைவி அவரது சக ஊழியருக்கு நோகியா செல்பேசியில் தமிழில் எஸ்எம்எஸ் அனுப்பி, பதிலையும் பெற்றிருக்கிறார்.  

ஆனால், இந்தியாவில் எப்போதுமே இந்த உள்ளூர்மயமாக்கம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அதற்கான ஆதரவும் குறைவுதான்.  ஐரோப்பாவிலும் தென்கிழக்காசியாவிலும் வர்த்தகரீதியில் வலுவாகவும் கலாச்சார ரீதியில் அதிமுக்கிய அம்சமாகவும் இருக்கும் உள்ளூர்மயமாக்க நடவடிக்கைகள் இந்தியாவில் மேம்போக்கானதாகவும் சடங்குத்தனம் நிறைந்ததாகவுமே உள்ளன. அதற்கு காரணங்கள் பல. அதில் முக்கியமானது இந்திய மென்பொருள் நிபுணர்களின் அக்கறையின்மை.

இதோ அதற்கு ஒரு உதாரணம்.  மேலே உள்ள திரை-படம்.  

 இது மைக்ரோசாஃப்ட் ஆதரவில் நடத்தப்படும் பாஷாஇந்தியா (www.bhashaindia.com) என்ற வலையகத்தில் ஒரு பக்கம். தமிழ் கலைச்சொற்கள் குறித்த பகுதி இது. இந்த படத்தில் உள்ள  தமிழ்நாடு என்றாலே பரத நாட்டியம் என்கிற டூரிஸ்ட்த்தனமான மேட்டிமை இமேஜ் ஒரு பக்கம் இருக்கட்டும். பின்னணியில் உள்ள எழுத்துக்களைப் பாருங்கள். எல்லாம் தெலுங்கு எழுத்துகள். இந்த பக்கத்தை வடிவமைத்தவர், அதற்கு ஓகே போட்டவர், பிறகு பார்த்தவர்கள் என பலருக்கும் இப்படி இருப்பது ஏன் உறுத்தவில்லை? தமிழ் வலைப்பக்கத்தில் தெலுங்கு இருக்கக்கூடாதா என்று அசட்டுத்தனமாக கேட்கக்கூடாது.  இருக்கலாம். காரணம் இருந்தால். ஆனால், இந்த வலைப்பக்க வடிவமைப்பாளர்கள் முதல் பாஷாஇந்தியாவின் பொறுப்பாளர்கள் வரை உள்ளூர்மயமாக்கக் கோட்பாட்டை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் தான் இந்த படம். அவ்வளவு அக்கறையின்மை! இப்படி ஒரு கூத்தை வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாது.  இந்தியா போன்ற தாய்மொழி்யின் பலாபலன்களை அறியாத ஒரு நாட்டில்தான் பார்க்கமுடியும். இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான வலையகம் என்று சொல்லிக்கொள்ளும் பாஷாஇந்தியா.காமிலேயே இந்த நிலை என்றால்… வேறு என்ன சொல்ல? 

Comments (4)

ரூபி ஆன் ரெயில்ஸ்

நான் ஒரு புரோகிராமர் கிடையாது.  ஆனால் வழக்கமாக எல்லோரும் பொன்னியின் செல்வனைப் படிப்பது போல நான் புரோகிராமிங் மொழிகளை அறிமுகப்படுத்தும் புத்தகங்களைப் படிப்பேன். (அதாவது, வேறு எந்த நிஜமான இயற்கை மொழியின் இலக்கண புத்தகங்கள் கிடைக்காதவிடத்து).

அப்படி சமீபத்தில் நான் படித்து இன்புற்ற ஒரு மொழி ரூபி.  அதுவும் வலையகங்களை உருவாக்குவதற்கான ரூபி ஆன் ரெயில்ஸ் என்ற உருவாக்க சட்டகம் பற்றி படித்த போது இன்னும் கொஞ்சநாளில் அமெச்சூர் புரோகிராமர்கள் கூட பெரிய பெரிய வலையகங்களை உருவாக்கிவிடலாம் போல இருக்கிறதே என்ற ஆகமாட்டாத ஒரு எதிர்பார்ப்பும் தோன்றியது.

ஆனால் இந்த பதிவை நான் அதற்காகப் போடவி்ல்லை.  http://qa.poignantguide.net என்ற வலையகத்துக்குச் சென்று அங்கே ரூபி மொழியை அறிமுகப்படுத்தும் ஒரு அட்டகாசமான புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.  மென்பொருள் இலக்கியம் என்றால் அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றும்.

எல்லா நிரல்மொழிகளும் அமெரிக்காவில் தோன்ற, ஜப்பானில் தோன்றியது ரூபி. மற்ற நிரல்மொழிகள் எல்லாம் நிரல்மொழியாளர்களுக்காக இருக்க, குப்பனுக்கும் சுப்பனுக்கும் (குப்பன், சுப்பன் என்பெதல்லாம் இயற்கை மொழியில் உள்ள variables) எழுதப்பட்ட மொழி ரூபி.

ரூபி ஆன் ரெயில்ஸ் மீது காதல் கொண்டோர் என்னோடு தொடர்புகொள்ளுங்கள். சும்மா ஆர அமர கதைப்போம்.

Comments (3)

பீட்டா கவிதைகள் 2

  

குழந்தைகள் கிளிஷேக்கள்

குழந்தைகள் கிளிஷேக்கள்.
எனினும்
ஒரு கவிஞனாலும் அவற்றினும் புதுமை செய்யவியலாது.

வாய் குழைத்து கை நீட்டியது,
மார்பில் மூச்சா போனது,
பூச்சி விழும் சப்தத்துக்கும் திடுக்கிட்டழுதது,
என மாறாப் பிள்ளைத்தமிழ்கள்
ஒவ்வொருவரின் நாட்குறிப்பிலும்.

அது தாயின் முலைக்காம்பை நோக்கி பாயும் விதமும்
தந்தையின் மீசைக் கண்டு விழிக்கும் விதமும் மாறியதில்லை.
காலத்தின் ஒரே நம்பிக்கை
கையில் ஈரம் படர கால்களை உதைத்துக்கொண்டிருக்கிறது.
இந்த குழந்தை ஒருநாள் பயங்கரவாதியாகலாம்.
பிச்சைக்காரியாகவோ டெய்லராகவோ ஆகலாம்.
டீச்சராக, இல்லத்தரசியாக ஆகலாம்.
முரட்டு எஜமானனாகவோ தூக்கிலிடுவோனாகவோ ஆகலாம்.
கடன்காரனிடம் மாட்டிக்கொள்ளாமலிருக்க செல்ஃபோனை அணைத்து வைக்கலாம்.

இந்த குழந்தை அந்த குழந்தையை ரேப் செய்யலாம்.
வேடிக்கை, வினோதம், விதிவசம்!
யாரும் அவர்களின் குழந்தைகளை
- எதிர்கால பயங்கரவாதி, பிச்சைக்காரி, இன்னோரன்னர் என்றன்றி-
குழந்தைகளாகத்தான் பார்க்கிறார்கள்.

இப்படித்தான் நாமும் முன்பிருந்தோம்
என்பதை நான் நம்புவதற்கில்லை.
எனது குழந்தையின் இந்த பருவத்தை
பாவியான நான் கடந்திருக்கவே இயலாது.

இவ்வளவு வெளிச்சத்துடனும் எதிர்பார்ப்பின்றியும்
ஒரு புன்னகையையும் நான் பூத்திருக்க மாட்டேன்.

 

அதனதன்

ஆறு நாணல்களுக்காக ஓடுவதில்லை
நாண்ல்கள் கரைகாக்க நிற்கவில்லை.
மீனும் மீன்கொத்தியும் உடன்பாடுகளுடன் பிறக்கவில்லை.
யாரும் யாரும் யாராகியரோ?
நான் கொடுத்த காசுக்கு
நீ தருகிறாய் நாலு இட்லி, கால் ஸ்பூன் சட்னி.
சில்லரை, இல்லையேல் சாக்லட்.

கதை இத்தோடு முடியவேண்டும் தானே?

குறுங்கவிதை ஒன்று

“விட்டுவிடுங்கள்.”

“சரி.”

குழந்தைமை

இழப்பதற்கென்றே ஒரு பருவம்.
உனக்கு இழப்பதற்கு எல்லாம் இருக்கிறது.
பெறுவதற்கோர் பொய்யுலகமும் உண்டு.

என் சின்னஞ்சிறு பெண்ணே,
காலம் உறைந்து நிற்கட்டும் என்று சபிக்க வாய்ப்பில்லாத எனக்கு
நீ பார்க்கிற பார்வைகளை நினைவில் உறைவித்து
எடுத்து வைக்கும் திறனாவது இருப்பின்,
கடவுள் உண்டென்று ஒப்புக்கொள்வேன்.

இரவுப்பயணம்

மோட்டலில் நின்றது பஸ்.

தூக்கக் கலக்கத்தில்
சிறுநீர் குடிக்கவும் டீ கழிக்கவும்
இறங்கினேன். திரும்பினேன்.

எல்லா ஆம்னி பஸ்களும் ஒரே மாதிரியாக.
எதிலும் இல்லை ஊர்ப்பெயர் பலகைகள்.
மதுரை – சென்னை, சென்னை -மதுரை எல்லாம் ஒன்றுதான்.

என் மார்க்க வாகனம் எது?
இதுதான் என்று உத்தேச உத்தரவாதமாய் ஏறிய பஸ்ஸில்
அடையாளம் ஏதும் உள்ளும் இல்லை.

ஊரில் ஏறும் போதே இருட்டு.
எதுவும் பதிந்திருக்கவில்லை.

இது என் சூட்கேஸ். பக்கத்து சூட்கேசும் அதே மாதிரி இருந்தது.
திறந்து பார்த்தல் நாகரீகமில்லை.
என் பெட்டியில் பெயரொட்டுவதோ பூட்டுப் போடுவதோ கிடையாது.
இது என் வாட்டர் பாட்டில். பக்கத்து பாட்டிலும் அதே கம்பெனி.
குடித்திருந்த அளவும் அதேதான்.

பக்கத்தில் இருந்தவன் வரட்டும் எனக் காத்திருந்தேன். வந்தார்.
இருட்டில் ஏறுகையில் முக அடையாளம் பார்க்கவில்லை.
உட்கார்ந்திருந்த நான்கு மணி நேரமும் முகம் பார்க்கவில்லை.

“நீங்கள் தான் என் பக்கத்துச் சீட்டுக்காரரா?”
“உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்களும் எங்கள் பக்கத்துச் சீட்டுக்காரரா என என்னால் தீர்மானிக்கவியலவில்லை”
பக்கத்து வீட்டுக்காரனே தெரியாதாம் அவனுக்கு.

“வண்டி மாறி ஏறிவிட்டிருப்போமோ?”
“ஒரு வேளை நானும் மாறிப்போயிருக்கலாம்.”
“வண்டி எடுக்கட்டும், பார்க்கலாம், “அநேகமாக, அதே சரத்குமார் படம் தொடரலாம்.”
“எல்லா வண்டியிலும் அதே படம் தான் ஓடும்.”
துணிந்து அமர்ந்தேன்.

சென்னை மார்க்கமோ, மதுரை மார்க்கமோ வண்டி திரும்பியது.

நிமிடங்களில் என்னை சூழ்ந்து அமைதியாக்கிய துயில் மட்டும்
கலைந்ததற்கு முன்பிருந்ததன் தொடர்ச்சிதான்.

முடிந்த விஷயம்

சாலை ஓரத்திலிருந்து சில அடி தூரம்.
மறைக்கத் திறனற்ற ஓணான் செடிக்கூட்டம்.
முக்கால் நிலவு வானில்.
சாயுங்காலம் தான் இன்னும்.
இன்னும் ஏழெட்டு வண்டிகள் பாக்கி.
எனினும், அவசர அவசரமாய்
நான் இடம்கொடுத்தேன் அவனுக்கு.

அனுமதிக்கப்பட்ட மணித்துளிகள்
மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்தும்
அந்த நிலவு மீண்டும் உதித்ததில்லை
என் புகுந்த வீட்டின் முற்றத்தில் பின்.

திட்டமிடல்

திட்டமிட்டு கவிதை எழுதமுடியாது.
முன்தேதியிட்ட காசோலை கொண்டு
சிவப்பு விளக்குப் பகுதிக்கு செல்லமுடியாது.
திட்டமிட்டு செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.
திட்டமிடல்.

Comments (4)

மதுரையில் BPO

மதுரையில் நேற்று (மார்ச் 2 2007), மதுரை சிறு மற்றும் குறு தொழில்நிறுவனங்கள் கூட்டமைப்பு (மடீட்ஸியா) சார்பில் நடந்த, பிஸினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் தொடர்பான, Setting up and Scope of BPO in Madurai என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். இந்த துறையில் தற்போதைய போக்குகளும் வாய்ப்புகளும் என்ன என்பது குறித்தும் மதுரை அதைப் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறித்தும் நான் பேசினேன். தொழில்வணிக நிகழ்முறை அயலாக்கம் (Business Process Outsourcing க்கு தமிழ். எப்படிங்க இருக்கு?) என்பது இனி எதிர்த்திருப்ப முடியாத ஒரு தொழில் நிகழ்முறையாக மாறிவிட்டது. அந்த துறையில் இந்தியா முன்னோடி என்பதால், தேவை கருதி,  இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும் இப்போது அது விரிவடையத் தொடங்கியுள்ளது. இது அந்தந்த நகரங்களில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு மூக்கு வேர்க்கவைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் அதைப் பார்க்க முடிந்தது. கலந்துகொண்ட 150 க்கும் மேற்பட்ட பேர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தொழில்முனைவோர் அல்லது தொழிலதிபர்கள். 40 வயக்குக்கும் மேற்பட்டவர்கள் பலர். சின்னப்பயல்களெல்லாம் 20, 30 ஆயிரம் என்று சம்பாதிக்கும்போது, நாங்களெல்லாம் என்ன செய்வது, பி.ப்பி.ஓ.வில் எங்களுக்கெல்லாம் தொழில்வாய்ப்பு இருக்குமா என்ற கவலையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். சென்னையிலோ பிற பெருநகரங்களிலோ பார்க்கமுடியாத ஒரு போக்கை அங்கே பார்க்கமுடிந்தது. ஒரு குறிப்பிட்ட துறையில் எப்படி அந்நிய நிறுவனங்களை நாம் ஈர்ப்பது என்று பெருநகரங்களில் பேசும் அதே வேளை, இந்த துறையில் உள்ளூர் தொழில்முனைவோர்கள் எப்படி பலன்பெறமுடியும் என்று மதுரைவாசிகள் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு புதிய துறை கால்கொள்ளும் போது, உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு மிக்ஸாக இருந்தால்தான் பிஸினஸ் பண்ணமுடியும் என்பது என் கருத்து. பெங்களூரில் தொழில்நுட்பம் சார்ந்த பி.ப்பி.ஓ, சென்னையில் நிதி/வங்கி சார்ந்த பி.ப்பி.ஓ, தில்லியில் அழைப்பகங்கள் என ஒவ்வொரு மாநகரமும் பொதுவான அயலாக்க நிறுவனங்களோடு பிரத்யேகமான அயலாக்க நிறுவனங்களை கூடுதலாகப் பெற்றுள்ளன. அந்த நகரங்கள் பின்பு அவ்வாறாக பிராண்ட் செய்யப்படுவதும் அதன் மூலமாக அதே துறையில் கூடுதல் முதலீடுகளை அவை கவர்வதும் இதனால் சாத்தியமாகியிருக்கிறது.  

இதைப் போல மதுரைக்கென்று ஒரு பிரத்யேக துறையை கருதமுடியுமா என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதற்கு உடனடியாக பதில் பெற முடியவில்லை, பெறுவது சாத்தியமில்லை என்றாலும் அது பரவலாக சிந்தனையைக் கிளறிவிட்டிருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது. உணவு இடைவேளையில் பலர் அது குறித்து உரையாடினார்கள். மதுரை மக்கள் தங்கள் நகரத்தை மிகவும் நேசிப்பவர்கள்தான் என்றாலும் கூட்டாக மதுரையை பிராண்ட் செய்யக்கூடிய தேவையை எந்த அளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தேவையில்லை. முன்னணி தொழிலதிபர்களின் பேச்சுகளில் அது பற்றி எதுவும் புலப்படமாட்டேன் என்கிறது. தனிநபர்வாதம்தான் எந்த பொதுநலனுக்கு எதிரி. கூட்டு சுயநலம் கூட இல்லையென்றால் நம்மை யாரும் காப்பாற்றமுடியாது.  மதுரையில் அயலாக்கத்துறைக்கான ஒரு சூழமைப்பை (Eco-system) உருவாக்குவதற்கு முதலில் கல்வியிலிருந்துத் தொடங்க வேண்டும். ஆனால், ஆங்கிலம் சரியாகத தெரியாததை மட்டுமே ஒரு பெரிய பிரச்னை என்று நினைக்கிறார்கள். ஆங்கிலப் புலமை சரியாக இல்லாததன் காரணமாக (இதை lack of communication skill என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம். மதுரைக்காரய்ங்களுக்கா பேசத் தெரியாது?) பி.ப்பி.ஓ. இங்கே வராது என்று பலர் அங்கலாய்த்தார்கள். பி.ப்பி.ஓ. என்றாலே கால்சென்டர்கள்தான் என்று நினைப்பதும் காரணம். எவ்வளவோ அயலாக்க பிரிவுகளில் ஆங்கிலம் ஒரு பிரச்னையே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்தில் front office மற்றும் project management அணியில் உள்ளவர்கள் மட்டும் நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும், பிறர் சமாளிக்கக்கூடிய அளவுக்கு ஆங்கிலப் பயிற்சி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தொழில் செய்யமுடியும்.  இன்னொரு விஷயத்தையும் கவனிக்கமுடிந்தது. என்னிடம் பணம் இருக்கிறது அல்லது நான் பத்து பி.ஸி. வைத்திருக்கிறேன், நான் என்ன பிஸினஸ் பண்ணலாம் என்று கேட்கிறார்கள். ஏதாவது புராஜெக்ட் ரிப்போர்ட் வைத்திருக்கிறீர்களா என்றும் அப்பாவித்தனமாக கேட்கிறார்கள். எந்த துறையில் நீங்கள் அயலாக்கப் பணிகளை வழங்க விரும்புகிறீர்களோ, அந்த துறையில் உங்களுக்கு விவரம் தெரியுமா, ஆழமான அறிவு இருக்கிறதா,  அந்த துறைதெரிந்த விற்பன்னர்களைக் கொண்ட அணியை அமைக்க தயாராக இருக்கிறீர்களா என்பதை விட்டுவிட்டு, வெறுமனே ரெண்டு ஃப்ளோர் காலி இடம் இருக்கிறது, இன்டர்நெட் வசதியோடு சிஸ்டம்ஸ் இருக்கிறது என்று பேசி பிரயோஜனமில்லை. நல்ல வேளையாக, இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு அந்த சேதி வலுவாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சிஸ்டத்துக்கு இவ்வளவு பணம் கொடு, ஆர்டர் தருகிறேன் என்று கிளம்பிவிடுகிற போலி பிஸினஸ்காரர்கள் குறித்தும் எங்கிட்ட ரெண்டு மில்லியன் டாலர் மதிப்புகள் யு.எஸ். புராஜெக்ட்கள் இருக்கின்றன, காசு கொடுத்தால் ஆர்டர் தருகிறேன் என்று சொல்லும் இடைத்தரகர்கள் குறித்தும் பேச்சாளர்கள் எச்சரித்தார்கள். நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் மடீட்ஸியாவின் ஐடி பிரிவு தலைவர் திரு. அஸ்வின் மேத்தாவும் வின்வேஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. ஆர்.சிவராஜாவும். இது குறித்து இவர்கள் பல மாதங்களுக்கு முன்பாகவே ஈ-குரூப் ஒன்றைத் தொடங்கி விவாதத்தைத் தொடங்கியவர்கள். சென்னை டிசிஎஸ்ஸிலிருந்து அதன் துணைத்தலைவர் திரு. வெங்கட்நாராயணன், புது தில்லியிலிருந்து எச்சிஎல் காம்நெட்டிலிருந்து நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் பிரிவின் ஏஜிஎம் திரு. விஷால் பாரபாத்ரே, பெங்களூரிலிருந்து பி.டி.இ. நிறுவனத்தின் திருமதி. சுனிதா, மதுரையிலிருந்து சுஸீ இன்ஃபோசிஸ்டமின் திரு. ராஜீவ், த இந்து பிஸினஸ் நிருபர் டாக்டர் ரங்கராஜன், சிஐஐயின் இந்த பிராந்தியத்தின் ஐடி பிரிவு தலைவர் திரு. ரெட்டி ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். திரு. சிவராஜாவின் நெறிப்பாட்டில் நடந்த விவாதம் சுவாரஸ்யமாக இருந்தது. மதுரைத் தொழில்துறை வளர்ச்சிப் பாதையில் இந்த நிகழ்வு – அதன் இலக்குகளை எட்டும் போது – முக்கியமானதாகப் பதிவு பெறும்.

Leave a Comment

சாத்தான் எழுதும் நாவல்

சாத்தான் என்னுடைய நண்பர்.  1995 இலிருந்து அவர் எனக்கு நண்பர்.  அவர் முதலில் ஒரு சீட்டுக்கவியாக இருந்தார். திருவல்லிக்கேணி-மயிலாப்பூர் பஸ் டிக்கெட்டின் பின்பக்கத்தில் வழக்கமாக கண்டக்டர்கள் ஒருபோதும் கொடுக்கப்போகாத சில்லரையை எழுதுவார்கள். சாத்தான் கவிதை எழுதுவார்.

தகவல்நுட்பம், இலக்கியம், கலை, மொழி என பல தலைப்புகளில் எழுதிவருகிற சாத்தானின் வலைப்பதிவை உங்களில் பலருக்கும் தெரியும்.  satanblog.wordpress.com செல்லுங்கள்.

இப்போது அவர் ஒரு நெடுங்கதை எழுதிவருகிறார். திசை காட்டிப் பறவை என்ற தலைப்பிலான குறுமத்தியாயங்கள் நிறைந்த அவரது கதைத்தொடரை நீங்கள் படித்தேயாகவேண்டும்.  இதை நான் ஸ்டாராங்காக ரெமண்ட் செய்வதற்கு காரணம், எனக்குத் தெரிந்தவரை,  சென்ஸிபிளான விஷயங்களை நான்சென்ஸாக எழுதும் எழுத்தாளர்கள் நிறைந்த இந்த நாட்டில்,  சென்ஸிபிளாக நான்சென்ஸ் ரைட்டிங்கில் கலக்கும் எழுத்தாளர் அவர். satanblog.wordpress.com

Comments (3)

தமிழகத்தின் வெற்றிகரமான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள்

தமிழ்நாட்டில் வழக்கமாக விவசாயமோ வேறு குடும்பத் தொழிலிலோ அலுவலக வேலையிலோ ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு தொழில்முனைவோர் உருவாவது அவ்வளவு சுலபமல்ல. இங்கே தொழில்முனைவோர் என்று நான் சொல்வது தொழில் தொடங்குகிற அத்தனை பேரையும் அல்ல. தொழிலதிபராக வளர்ந்து, ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்து, நிறுவனமயப்படுத்தப்பட்ட பிஸினஸை செய்பவர்களை மட்டுமே. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் நேற்றைய/இன்றைய வெற்றிகரமான முதல் தலைமுறைத் தொழில்முனைவோர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பது என் நீண்டநாள் அவா. ஒருவகையில் அதில் சுயநலமும் இருக்கிறது.

நானும் ஒரு முதல் தலைமுறைத் தொழில்முனைவோன்தான். எனது தாத்தா காலம் வரை எங்கள் மூதாதையர்கள் பரம ஏழையான நெசவாளர்கள். எனது அப்பா நெசவுத் தொழில் செய்துகொண்டே படித்து, வித்துவான் பட்டம் வாங்கி, ஆசிரியாக ஆனவர். அவர் ஓய்வு பெறும்போது தலைமையாசிரியராக இருந்தார். என் அம்மா அஞ்சாங்கிளாஸ். எனது சொந்தத்தில் யாரும் பிஸினஸ் கிடையாது. தூரத்து சொந்தங்களில் சில வியாபாரிகள் உண்டு.  நான் ஒரு நல்ல டாக்டராகவோ பொறியாளராகவோ அல்லது அதிகாரியாகவோ ஆகவேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. கொஞ்சகாலம் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் வேலை செய்த நான், பிறகு ‘தொழில்முனைப்பு பூச்சிக் கடித்து’, பிஸினஸ் தொடங்கினேன்.  என் வாழ்க்கைத்துணைவியாரின் ஒரே ஆதரவைத் தவிர, எனக்கு வெளிப்படையான, மனப்பூர்வமான ஆதரவு என் சுற்றத்தில் யாருமில்லை. நாற்பது, அம்பதாயிரம் சம்பளம் வாங்க வேண்டிய புள்ளை, பிஸினஸ், அது இதுன்னு வாழ்க்கையை வீணாக்குகிறான் என்கிறார்கள் சிலர். மாட்டை மேய்த்தோமா, கோலைப் போட்டாமா என்றில்லாமல் இது என்ன வேலை என்கிறார் ஒருவர். டிரைவர்களெல்லாம் பஸ் ஓனர்களாக ஆக முயற்சிக்கக்கூடாது என்கிறார் என் அப்பா. இவ்வளவு வருஷம் ஆச்சு, பிஸினஸ் உனக்கு சரிப்பட்டு வராது, ஒழுங்கா வேலைக்குப் போ என்று அறிவுரைக்கும் நலன்விரும்பிகள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவி்ல் ஒரு பாட்டுக்குள் பணக்காரனாகும் வித்தை எனக்குத் தெரியவில்லை என்பதே ஆதங்கம். இதற்கிடையில் நாலஞ்சு வென்ட்ச்சர்களைத் தொடங்கி, அடிபட்டு, சற்றே தேறி, இப்போது ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தை நடத்திவருகிறேன். ஆழி என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கியிருக்கிறேன்.

 இன்று வெற்றிகரமாக பிஸினஸில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் என்னை விட நிறைய கஷ்டங்களை அனுபதித்திருக்கிறார்கள்.  நிறைய rags to riches கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான ஒரு வழி தான் புத்தகம் எழுதுவது. இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற ஆசையை இப்போது நடைமுறைப்படுத்த விரும்புகிறேன்.

 ஆனால் இதில் உங்கள் உதவியும் தேவை

- நீங்களும் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

- அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் அப்படி இருந்தால் அறிமுகப்படுத்துங்கள்

- நீங்கள் வியந்து போற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் – இன்றைய வெற்றிகரமான தொழிலதிபர்கள் – அவர்கள் பிரபலமானவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயமி்ல்லை- குறித்து டிப்ஸ் கொடுங்கள். அவர்களையெல்லாம் சந்தித்து உரையாடி, வலுவான தகவல் புலத்துடனும் அறிவுச் செல்வத்துடனும் அந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.

கை கொடுங்களேன்!

Comments (7)

தமிழ்க்கொடி 2006 – ஆண்டுத்தொகுப்பு

January 8, 2007
தமிழ்க்கொடி 2006
 
தமிழ்க்கொடி 2006 – இது ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆண்டுத்தொகுப்பு.

இந்த தொகுப்பு இப்போது சென்னைப் புத்தகக்காட்சியில் காலச்சுவடு, பாரதி புத்தகாலயம், புன்னகை, சிலிக்குயில், ஞானபாநு, வம்சி புக்ஸ், சாஃப்ட்வியூ போன்ற ஸ்டால்களில் கிடைக்கிறது.

 தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, அமெரிக்கா, கனடா,  பிரான்ஸ்,  சுவிஸ்,  ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,  மலேசியா,  வளைகுடா நாடுகள் ஆகிய இடங்களில் இருந்து 40 எழுத்தாளர்களின் இதில் எழுதியிருக்கிறார்கள்.
அரசியல், சமூகம், பண்பாடு, புலம்பெயர் வாழ்க்கை, பொருளாதாரம், கலை, இலக்கியம், ஊடகம் என விரிந்த பரப்பில், 2006 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் போக்குகளையும் ஆழமாகவும், விரிவாகவும் அலசும் / பிரதிபலிக்கும் கட்டுரைகளும் நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுருக்கின்றன.

இந்த தொகுப்பு பற்றிய விவாதங்களுக்காகவும் பின்னூட்டங்களுக்காகவும் tamilkodi2006.wordpress.com என்ற வலைப்பதிவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  இந்த நூலை நீங்கள் வாங்கிப் படித்த பிறகு அதில் உங்கள் பின்னூட்டங்களை அளியுங்கள்.  நூலை வாங்க, எனக்கு மடலிடுங்கள் (zsenthil@gmail.com).

இந்த ஆண்டுத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளவை:

சிறப்புக்கட்டுரைகள்
 01. அ. மார்க்ஸ்
  வெற்றிபெற்றவர்களும் தோல்வியடைந்தவர்களும்

 02. வ.கீதா
  தமிழ்ச்சூழலில் அறிவியக்கம்

 03. பா.ரா.சுப்பிரமணியன்
  சொற்களஞ்சியத்திற்குப் பயன்படுத்த வேண்டிய ஆதாரம்
 
நேர்காணல்
 04. பாமா
  மனிதநேயம் செத்துக் கொண்டிருக்கிறது

 05. சுப.வீரபாண்டியன்
  திராவிடத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம் ஆபத்தானது

 06. ரவிக்குமார்
  தலித் அரசியல்: போராட்ட அரசியலிலிருந்து  ஆக்கபூர்வ அரசியலுக்கு
 
 07. காஞ்சனா தாமோதரன்
  நம்மை வளர்த்த சமூகங்களுக்குத்
  திரும்பிச் செய்ய வேண்டும்

தமிழ்கூறும் நல்லுலகு
 
 08. கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்)
  எட்டுத்திக்கும் மதயானைகள்
 
 09. ஜமாலன் (வளைகுடா நாடுகள்)
  பணம் தேடிச்செல்லும் பாய்மரங்கள்
 
 10. லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா)
  தமிழ் அவுஸ்திரேலியர்கள் இன்று
 
 11. மணி மு.மணிவண்ணன் (அமெரிக்கா)
  தமிழ் அமெரிக்கர்கள் வாழ்வில் திருப்புமுனை?
 
 12. றஞ்சி (சுவிஸ்)
  பெயர்ந்த புலத்திலும் பெண்கள்
 
 13. ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
  சிக்கல் இல்லாமல் தொடரும் வாழ்க்கை
 
 14. ரெ.கார்த்திகேசு (மலேசியா)
  தோட்டம் விட்டு
 
 15. வ.ந.கிரிதரன் (கனடா)
  மெதுவான முன்னேற்றம்
 
 16. துரைமடன் (ஈழம்)
  அரசியல் திசைப்போக்கும் அடையாள எழுச்சியும்
 
அரசியல் – சமூகம்

 17. புனித பாண்டியன்
  தமிழர் மலத்தை தமிழர் அள்ளும் அரசியல்

 18. ஞாநி
  தமிழக அரசியல்: யாருக்கு ஏற்றம்? யாருக்கு இறக்கம்?

 19. ச.தமிழ்ச்செல்வன்
  எதிர்மறைச் சமூகம்

 20. ப.சு. அஜிதா
  பெண்கள் குறித்த சட்டங்களும், தீர்ப்புகளும்

 21. பாரதிபாலன்
  தரமான கல்வியைத் தேடி

 22. செ.ச.செந்தில்நாதன்
  உலகமயமாதல் எனக்கு, உலகபயமாதல் உனக்கு…

 23. சுசி திருஞானம்
  தலைமை தாங்கட்டும் தமிழகம்

இலக்கியம்
 24. ஸ்ரீநேசன்
  கவித்துவத்தின் எல்லை

 25. ஜீ.முருகன்
  வரிகளும் வார்த்தைகளும்…

 26. எம்.கோபாலகிருஷ்ணன்
  நாவல் என்னும் பெருவழிப்பாதை

 27. பாவண்ணன்
  தொடரும் பயணத்தின் இடையில்

 28. அரவிந்தன்
  சலனங்களும் சவால்களும்

 29. அழகிய பெரியவன்
  தலித் உரைநடை

 30. அ.சதீஷ்
  காலம் கண்ணாடி முன் நிர்வாணமாய் நிற்கிறது

 31. ஆ.தனஞ்செயன்
  தனித்துவமான கல்விப்புலச்சிறப்புடன்

 32. லதா ராமகிருஷ்ணன்
  கவிதைசார் போக்குகள்
கலை
 33. சி.மோகன்
  சலனங்களும் சஞ்சாரங்களும்

 34. சி.அண்ணாமலை
  சுழல்வெளி
 
 35. க்ருஷாங்கினி
  முற்றிலுமான புதுமை சாத்தியமா?

ஊடகம்
 36. அ.ராமசாமி
  சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்

 37. செழியன்
  நமது தமிழ்ப்படம்

 38. தங்க. ஜெய்சக்திவேல்
  அலைகள் ஓய்வதில்லை

 39. மா. சிவக்குமார்
  வலைத்தமிழின் அடுத்த வீச்சு

 40. நிழல் ப.திருநாவுக்கரசு
  கைப்பிடிக்குள் கனவு

Comments (2)

தமிழாக்கம் 2006: கருத்தரங்கும் பயிற்சிப்பட்டறையும்

தமிழாக்கம் 2006

Thamizhaakkam 2006  தொழில்முறை மொழிபெயர்ப்பு:

நுட்பங்களும் வேலைவாய்ப்புகளும் 

குளோபலிங்கோ மற்றும் ஆழி பதிப்பகம் ஏற்பாடு செய்யும் கருத்தரங்கும் பயிற்சிப்பட்டறையும் அக்டோபர் 28 – நவம்பர். 4, 2006சென்னை 

தமிழாக்கம் 2006 க்கு வருக! 

இந்தியாவின் முன்னணி மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் ஒன்றான குளோபலிங்கோவும் அதன் தோழமை நிறுவனமான ஆழி பதிப்பகமும் தொழில்முறை மொழிபெயர்ப்பு குறித்த மேற்கண்ட கருத்தரங்கையும் பயிற்சிப் பட்டறையையும் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது.  இந்த நிகழ்வுகளில் பங்கெடுக்குமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.  

செ.ச.செந்தில்நாதன்குளோபலிங்கோ/ஆழி பதிப்பகம்   
கருத்தரங்கு: தொழில்முறை மொழிபெயர்ப்பு: அனுபவங்களும் எதிர்பார்ப்புகளும் 

நிகழிடம்: DBICA, Don Bosco Institute of Communication Arts, The Citadel, 45, Landons Road, (Around Tailers Road), Near Ega Theatre, Chennai 10. அரும்பு பத்திரிகை அலுவலக வளாகம். தேதி: அக் 28 & 29: நிகழ்ச்சிநிரல் அக் 28: 

10.00 காலை: தொடக்கவிழா·          திரு. கதிர், பொறுப்பாசிரியர், தினகரன் நாளிதழ்·          திரு. ஆனந்த நடராஜன், அசோசியேட் எடிட்டர், இந்தியா டுடே·          திரு. ஆர். வெங்கடேஷ், துணைத்தலைவர், உள்ளடக்கம், ஆனந்தவிகடன்            11.15 காலை: அமர்வு 1: தொழில்முறை அணுகுமுறை ஏன்?·          திரு. ஏ.ஜே.பாலசுப்ரமணியம், பொது மேலாளர், மனிதவள மேம்பாடு, காவேரி இன்ஃபோஸிஸ், சென்னை·          பேரா. ஆ.இரா. வெங்கடாசலபதி, பதிப்பியல் ஆய்வாளர், எம்ஐடிஎஸ், சென்னை·          திரு. செ.ச.செந்தில்நாதன், சி.இ.ஓ., குளோபலிங்கோ, பதிப்பாளர், ஆழி            2.00  மாலை: அமர்வு  2: மீடியாவுக்கான மொழிபெயர்ப்பு·          திரு. சுசி. திருஞானம், தொலைக்காட்சி நிபுணர்·          திரு. சுகதேவ், பத்திரிகையாளர்·          திரு. சுரேஷ் பால், விரிவுரையாளர், விஸ்காம், லயோலா. 4.30  மாலை : அமர்வு 3: மொழிபெயர்ப்பு அணுகுமுறைகள்·          திரு. பி. தனபால், சி.இ.ஓ. மின்வெளி, திரைப்படவியலர்.·          திரு. மு. சிவலிங்கம், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர். அக் 29: 10.00 காலை: அமர்வு 5: துறைசார் மொழிபெயர்ப்பு  ·          திரு. மு. சிவலிங்கம், தகவல் தொழில்நுட்ப எழுத்தாளர்·          திரு. சந்திரன், வர்த்தக இதழியலாளர்·          திரு. மா. சிவக்குமார், லீனக்ஸ் மொழிபெயர்ப்பு நிபுணர்            11.00 காலை: அமர்வு 6: இலக்கிய மொழிபெயர்ப்பு·          திருமதி அமரந்த்தா, இலக்கிய மொழிபெயர்ப்பாளர்·          திரு. அரவிந்தன், எழுத்தாளர், பொறுப்பாசிரியர், காலச்சுவடு·          திரு. சா.தேவதாஸ், இலக்கிய மொழிபெயர்ப்பாளர்            12.00 நண்பகல்: அமர்வு 6: மொழிபெயர்ப்பாளர்களுக்கான கணிப்பொறி, இணைய திறன்கள்            திரு. ஆர்.சிவராஜா, வின்வேஸ் சிஸ்டம்ஸ், மதுரை            திரு. மா. ஆண்டோபீட்டர், சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ், சென்னை 

பயிற்சிப்பட்டறை நிகழிடம்:  GlobaLINGO, 12, First Main Road, United India Colony, Kodambakkam, Chennai 24 (Near Liberty Theatre) அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை 

சிறப்பு உரைகள்: (காலை 9.30  - 10.30) ·          அக் 30 - 31: சந்திரன்- பிஸினஸ் மற்றும் நிதி செய்திகளை புரிந்துகொள்ளுதலும் மொழிபெயர்த்தலும்·          நவ 1: பேரா.பெருமாள் முருகன், எழுத்தாளர், நவீன தமிழ் நடை·          நவ.2 தி.சு.சதாசிவம், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர், மொழிபெயர்ப்பு நுட்பங்கள் குறித்து ·          நவ 3 அரவிந்தன், காலச்சுவடு, ஆங்கில idioms and phrases ஐ மொழிபெயர்த்தல்·          நவ 4: மு.சிவலிங்கம், தகவல் தொழில்நுட்ப சொல்லாக்கமும் நடையும் பொது பயிற்சி: (செ.ச.செந்தில்நாதன்)தினசரி·          காலை 10.30 -11.30:  மொழிபெயர்ப்பு மேலாண்மை, வழிமுறைகள்·          காலை 11.45 – 12.50:  மொழிபெயர்ப்பு பார்வையில் ஆங்கில, தமிழ் இலக்கணங்கள்·          மாலை 2.30-4.30:  செய்தி மொழிபெயர்ப்புப் பயிற்சி.·          மாலை 4.45-7.30: கணிப்பொறி பயிற்சி – யூனிகோடு, மொழிபெயர்ப்பு நினைவு, எடிட்டிங்             

பதிவு செய்ய:             கருத்தரங்குக்கு:·          பதிவு இலவசம். தொடர்புக்கு:  994014743 அல்லது zsenthil@gmail.com. அனுமதி முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அடிப்படையில்.             பட்டறைக்கு:             ·          பதிவு கட்டணம் ரூ.2000  (மாணவர்களுக்கு 15 சதம் கழிவு)·          பயிற்சிச்சுவடிகள், நண்பகல் உணவு, மென்பொருள் சிடி இதில் அடக்கம்.·          பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வோர்க்கு ரூ.5000 மதிப்புள்ள மொழிபெயர்ப்பு பணிப்பீடு உத்தரவாதம்.·          குளோபலிங்கோ, ஆழி பதிப்பக திட்டப்பணிகளில் தொடர்ந்து பணியாற்றலாம்.           

முகவரி GlobaLINGO12, First
Main Road,
United
India Colony,
Kodambakkam,Chennai600024
Mobile: 9940147473
globalingo@gmail.com 
Contact Person: S. Senthil Nathan 

Leave a Comment

« Newer Posts · Older Posts »