சென்னையில் நேற்று நடந்த, பன்னாட்டுத் தாய்மொழி நாள் சிறப்புச் சந்திப்பு கிட்டத்தட்ட வெற்றிகரமாகத்தான் நடந்தது என்று சொல்லவேண்டும். அந்த நிகழ்ச்சியின் இறுதியில்
விக்கிபீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகளை வெளியிடுதற்கான இயக்கம் ஒன்றைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
முதலில் நிகழ்ச்சிக்கான பின்புலம்:
பன்னாட்டு தாய்மொழி நாளை ஒரு விழாவாகக் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்தது. இந்த ஆண்டு அதை பெரிய அளவாக இல்லையென்றாலும் சிறு
அளவிலாவது நினைவுகூர வேண்டும் என்று தோன்றியதால் ஒரு சந்திப்புக்காக ஏற்பாடு செய்ய முயன்றேன். ஆர்வம் உள்ள நண்பர்கள் அதை வெற்றிகரமான ஒரு சந்திப்பாக
ஆக்கிவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
பிப்ரவரி 21 – வியாழன் வேலை நாள் என்பதால் பலருக்கு வரவாய்ப்பில்லாமல் போனது என்றாலும், வந்திருந்தவர்கள் பல் வேறு துறையினராக இருந்தது சிறப்பு. சூளைமேடு நெல்சன்
மாணிக்கம் சாலையில் சாஃப்ட்வியூ விஷுவல் கம்யூனிகேஷன் நிறுவனம் அன்புடன் அளித்த இடத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து தினமணி்க்காக நான் எழுதிய கட்டுரை ஒன்று வரக்கூடும். வந்த பிறகு அதை வலையேற்றுகிறேன்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், 1952 இல் பிப்ரவரி 22 ஆம் நாள் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷில்), உருது மொழித்திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில்
பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். அந்த நாளை முன்னிட்டு, 1998 இல் யுனெஸ்கோ அமைப்பு பன்னாட்டு தாய்மொழி நாள் என்ற புதிய தினத்தை அறிவித்தது. சிறுபான்மையர் மொழிகள்,
சிறு மொழிகள், அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள், இன மொழிகள் என பலவித பெயர்களில் அறியப்படும் மொழிகளையும் பிற மொழிகளையும் அந்தந்த மொழியினர் கொண்டாட
வேண்டியதற்கான அவசியம் எழுந்திருப்பதே விசித்திரமான விஷயம் தான். காதல் காணாமல் போகும் போதுதானே காதலர் தினம் கொண்டாட வேண்டியிருக்கிறது!
சரி, நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு வருவோம். வளர்தொழில் வெளியீட்டாளர் திரு ஜெயகிருஷ்ணன், சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்கள் தலைவர் திரு. மா
ஆண்டோபீட்டர், பிஎஸ்ஜி லெதர்லிங்க்ஸ் தலைவர் திரு மா சிவக்குமார், மின்வெளி நிறுவனத்தின் தலைவர் திரு பி தனபால், சன் நியூஸ் செய்தி ஆசிரியர் திரு. திருஞானம், தென்திசை பதிப்பாளர் திரு திருமாவேலன், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் கஜேந்திரன், எழுத்தாளர்கள் சந்திரன், ஆதி வள்ளியப்பன், தமிழ் அன்பர்கள் ச.சிவகுமார், தமிழ் முகிலன், சுந்தரராஜன், பாலசுப்பிரமணியம், மொழிபெயர்ப்பாளர் மாரி கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
மொழி வளர்ச்ச்சியின் திசைவழியையும் அதன் சமூகப் பொருளாதார பின்புலம் குறித்தும், மொழி வள மேம்பாடு குறித்தும் ஒரு நீண்ட பவர்பாயின்ட் விளக்கக்காட்சியை நான் அளித்தேன்.
(அதை விரிவாக்கி விரைவில் இங்கே வலையேற்றுகிறேன்).
பிறகு மொழி மேம்பாடு குறித்த செயல்பாடுகளுக்கான பொதுவான அமைப்புரீதியிலான தேவைகள் குறித்து விவாதங்கள் எழுந்தன. இன்னும் குறிப்பாக ஏதேனும் ஒரு செயல்பாட்டை
மையமாக வைத்து அமைப்பாக திரள்வது குறித்து பேசினோம்.
நீண்டகாலமாக என் மனதில் இருந்த ஒரு ஆசையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அப்போது உருவானது. அதாவது விக்கிபீடியா போன்ற உலகளாவிய முயற்சிகளில் தமிழின் பங்கு கூடுதலாக
இருக்கவேண்டும் என்பது குறித்து பல காலமாக சிந்தித்து உண்டு. தமிழ் இணைய மாநாடுகளில் இது குறித்து பேசியிருக்கிறேன். கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும்
இது குறித்து நிறைய பேசியிருந்தேன். அண்மைக்காலமாக, மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்கத் தளங்களில், பொறிவழி மொழிபெயர்ப்பு (Machine Translation), அகராதியாக்கம் போன்ற
செயல்பாடுகளில் தமிழில் கணிவழி பகுப்பாய்வுக்கு ஏற்ற நிலையில் நிறைய உரைத்தொகுப்புகள் (corpus) இல்லை என்பது குறித்து அந்த துறையில் இயங்கும் நிபுணர்களின் ஏக்கத்தை
பகிர்ந்துகொள்ளவேண்டிவந்தது. அரசும் பல்கலைக்கழகங்களும் உரிய அளவுக்கு தங்கள் கடமைகளை ஆற்றாதபோது, ஆர்வமுள்ள தனிநபர்களின் மீதுதான் பொறுப்பு விழுகிறது.
புராஜெக்ட் கூடன்பர்க், விக்கிபீடியா, விக்ஷனரி, வேர்ட்நெட் போன்ற உலகளாவிய முயற்சிகளினூடாக, அவற்றில் தமிழையும் இடம் பெறச்செய்வதன் மூலம், இவற்றை சாதிக்க முடியும் என்பது ஒரு வியூகம். ஆனால் இதைச் செய்வதற்கு பல தரப்பு ஒத்துழைப்பு வேண்டும். தனியாக ஒரு ஆளோ ஒரு நிறுவனமோ மட்டும் செய்கிற வேலை இல்லை இது. இந்த சிந்தனையிலிருந்து பிறந்தது தான் விக்கிபீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகரிப்பதற்கான ஆசை. இப்போது அதில் 10,000 க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் இருக்கின்றன. (அவற்றை முதலில் அதில் வெளியிட்டவர்களுக்கு முதற்கண் எமது நன்றிகள்).
ஆனால், செம்மொழித்தமிழுக்கு இந்த பத்தாயிரம் பத்தாது. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது தமிழில் வேண்டும். இந்த விருப்பத்தை ஒரு தி்ட்டமாக்கமுடியுமா என்று சந்திப்புக்கு வந்த நண்பர்களிடம் கேட்டபோது, உடனடியாக எல்லோராலும் அது வரவேற்கப்பட்டது. சில நிமிடங்களில் அதற்கான ஆதரவு அமைப்பாக வடிவம் கொண்டது. மா சிவக்குமார், ஜெயகிருஷ்ணன், தனபால், சந்திரன் உள்ளிட்ட அனைவரும் சில பூர்வாங்கப் பொறுப்புகளை ஏற்க முன்வந்தார்கள்.
தற்போதைக்கு ‘வலைக்களஞ்சியம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை அரசு, தனியார் உதவிகளுடன் இதை வெற்றிபெறச்செய்ய, ஒரு அமைப்பை உருவாக்க, நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இது குறித்து மார்ச் முதல்வாரத்தில் கூடிப் பேசலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் மட்டுமா? நீங்களும் தான். மா சிவகுமார் ஓரிரு நாளில் ஒரு மின்னஞ்சல் குழுவை உருவாக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு ஆர்வமுள்ள அனைவரையும் இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும்.
எழுத்தாளர்கள், இதழாளர்கள், விஷயஞானிகள் மட்டுமல்லாமல், பெருவாரியாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் நிபுணர்களும் பங்குபெற்றால் இந்த கனவு நனவாகும். எளிதில் உற்சாகம் தொற்றிக்கொள்கிற இலக்கு அல்லவா இது?
நிதி, தொழில்நுட்பம், உள்ளடக்கம், விளம்பரம், ஆதரவு என பல தளங்களிலிருந்து அதற்கு ஆதரவு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
ஆயிரம் நாளில் லட்சம் கட்டுரைகள்! இலக்கு ஓர் இலக்கம் அல்லது லட்சம் கட்டுரைகளே லட்சியம் அல்லது ஆயிரம் நாளில் நூறாயிரம் உரைகள் என்பது போன்ற முழக்கத்தோடு அந்த முயற்சி தொடரும்.
இது குறித்து மேலும் விவரங்களை எதிர்பாருங்கள்.
உங்கள் உதவிக்கரங்களை எதிர்பார்க்கிறோம். வழிநடத்தும் விழிகளையும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறாக, ஒரு வகையில், அந்தச் சந்திப்பு வெற்றிகரமான ஒன்றாகவே மாறியிருக்கிறது….
அடுத்த ஆண்டு தாய்மொழி நாளை பெரிய அளவில் கொண்டாடமுடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.