இந்த அதிர்ச்சி மிகுந்த தகவல் தமிழ் கூறு நல்லுலகத்தை எட்டியிருப்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில் அடித்து ஓய்ந்த நர்கீஸ் புயல் மியான்மரில் லட்சத்துக்கு மேற்பட்டவரை காவு கொண்டது அனைவரும் அறிந்ததே. அதில் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நர்கீஸின் கொடுங்காற்றில் சிக்கிய பெரும்பாலான இடங்களில் தமிழர்கள் வசிக்கும் கிராமங்கள் முற்றிலும் அழிந்துபோயிருக்கின்றன.
தமிழக முதல்வர் கலைஞருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலாளரும் மனித உரிமை செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான து. ரவிகுமார் எழுதியிருக்கும் மடல் கீழே. மணிப்பூரில் மோரே நகரில் உள்ள தமிழ்ச் சங்கத்தினர் புயல் சேதம் குறித்து அளித்த நிவாரண உதவிகள் பற்றிய செய்திக்கான இணைப்பும் இங்கே தரப்பட்டுள்ளது.
திரு ரவிகுமார் இது குறித்து நிவாரண உதவி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அவருக்கு நாம் அனைவரும் உதவுவது நம் கடமை. பர்மா தமிழர்களின் சோகம் பற்றி வேறு தகவல் கிடைத்தால் தயவு செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
திரு ரவிக்குமார் மடல்:
து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்
காட்டுமன்னார்கோயில்
பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
27-05-08
மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு
பொருள்: மியான்மர்-நர்கீஸ் புயலில் தமிழர்கள் பாதிப்பு-நிவாரண உதவிகள் தொடர்பாக
வணக்கம்
மியான்மர் நாட்டைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு அங்கு வாழும் தமிழர்கள் பலியாகியுள்ளனர். அங்கே இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டிக்கொண்டுள்ளது. அதில் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள் இறந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர்.
நர்கீஸ் தாக்கியதைத் தொடர்ந்து மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐ.நா.சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும்கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங்கு வாழும் சிறுபான்மைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
மியான்மரில் ஐராவதி டெல்டா பகுதியும், பகோ மாகாணமும், யாங்கூனைச் சுற்றியுள்ள பகுதிகளும்தாம் நர்கீஸ் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன(பார்க்க: வரைபடம்) அந்த பகுதிகள் யாவும் தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளாகும். தமிழர்களின் கிராமங்களான கையான், சௌதான், தல்லா, இராவடி, தோங்குவா, தங்கி, திங்காஜூன், டவுன்டகோன், முதலியவை முற்றாக அழிந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. பகோ மாகாணத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாகத் தமிழர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யாங்கூனில் சுமார் இருபது சதவீதம் தமிழர்கள் உள்ளனர். இதுதவிர பிலிக்கான், டகோன், டாகிடா, எரியா, டகோமியா முதலான தமிழர் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மியான்மரில் தற்போது சுமார் 15 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் நாற்பதாயிரம் பேர் நர்கீஸ் புயலுக்கு பலியாகி இருப்பது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
மியான்மரின் இராணுவ அரசாங்கம் சரிவர மீட்புப் பணிகளைச் செய்யாததால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. உப்பு ஒரு கிலோ மியான்மர் பணத்தில் 1500.00 ரூபாய் விற்கிறது. ஒரு லிட்டர் குடி தண்ணீர் மியான்மர் பணத்தில் 1200.00 ரூபாய். பால்பவுடரின் விலையோ ஒரு கிலோ பத்தாயிரத்துக்கும் அதிகம்.
மியான்மரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் மணிப்பூர் மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.சேகர், செயலாளர் ரவிச்சந்திரன், அதன் நிறுவனர்களுள் ஒருவரான திரு.யூசுப், மணிப்பூர் மாநிலம் மோரே மாவட்டத்தில் சப்-கலெக்டராகப் பணிபுரியும் திருமதி.ஜெஸிந்தா லசாரஸ் I.A.S ஆகியோரிடம் தொலைபேசியில் விசாரித்து இந்தத் தகவல்களைப் பெற்றேன். மியான்மர் தமிழர்கள், உரிய உதவிகள் கிடைக்காவிட்டால் மேலும் உயிர் இழப்புகளை சந்திக்கும் அவல நிலையில் உள்ளனர்.
உலகத் தமிழர்களின் நம்பிக்கையாய் விளங்கும் தமிழினத் தலைவரும், தமிழக முதல்வருமான தாங்கள் மியான்மரில் தவிக்கும் தமிழ் மக்களின் துயர்துடைக்கும் விதமாகத் தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகளை அனுப்பிட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
நன்றி
பணிவோடு
து.ரவிக்குமார்
27.05.08
மோரே தமிழர் உதவி குறித்த செய்தி:
