பீட்டா கவிதைகள் 3.1

ஒரு கல்யாண்ஜி கவிதை

கல்யாண்ஜி சொன்ன
நான்கு சுவர்களும் சொந்தமில்லாத அடுக்கக வீடு,
கேப், அலுவலகம், மால் என
நிழல் விழா வாழ்வின் இருள்வெளிகளில்,
கல்யாண்ஜி பார்த்த
பாம்புப் பிடாரனும் குறிசொல்பவனும்
வருவதற்கு இடம் தராத
இந்த கேட்டட் கம்யூனிட்டியின் குறுங்குளத்தின் கரையில்,
கவிதை வராமலில்லை.

நீங்கள் செல்லத்துணியாத பாதையில் உங்கள் பேரன்
சென்று,
திரும்பவியலாத் தொலைவில் வாங்கிப் போட்ட
புதியதோர் அடுக்கத்திலும்,
அதே பூசணிக்காய்தான் தொங்குகிறது.
இருப்பது அவன் புது மனைவி மட்டும்
கூடவே மாமியார், அவர் வீட்டு பூனைக்குட்டி.

அரபுப் பாலையோ
ஸ்ட்ரைட் கரையோரமோ
மிஸ்ஸிபி தீரமோ
அலைந்து திரிகிற,
இரு வாரம் விடுப்பில் மணம் புரிந்து, 
உச்சம் புரியாது சென்றுவிட்ட,
புது மனைவியின் புதுப்புருஷனின்
பிருஷ்டத்தில்
அன்று கணக்காசிரியர் விசிறித்தள்ளிய
பிரம்பின் தழும்பு இன்னமும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது
தங்கவேட்டையின் விதிகளை.

வெற்றியின் தோல்விகளைப் புரிந்துகொள்ளும்
கணத்தில்,
புது மனைவியின் மனத்தில்
இன்னமும் எழுகின்றன கவிதைகள்.
எழுதமட்டும் தான் முடியவில்லை
கல்யாண்ஜியின் பென்சில் இல்லாததால்.

Leave a Comment