Archive for May, 2007

BhashaIndia.com இன் Localization குளறுபடி

bhashaindia.jpg

Localization – இது பற்றி மென்பொருள் உலகில் கடந்த ஒரு பதிற்றாண்டாக நிறைய பேச்சு. எல்லா நாடுகளையும் மதித்து கலாச்சாரங்களையும் காப்பாற்றி மொழிகளையும் பேணி பல்கலாச்சார உலகைக் கொண்டாடுவோம் என்று உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் சொல்லிக்கொண்டுவருகிறார்கள். சொல்லப்போனால் நிறைய செய்தும் வருகிறார்கள். மைக்ரோசாஃப்ட்,  சன், நோகியா, கூகிள், ராய்ட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் Localization என்கிற இந்த உள்ளூர்மயமாக்க முறை மூலம் அந்தந்த நாடுகளின் சந்தைகளிலும் மேலும் பரவிச்செல்ல வழிவகைச் செய்துகொள்கிறார்கள்.

இந்த உள்ளூர்மயமாக்கமும் (அதற்கு பின்னால் இருக்கிற உலகமயமாக்கமும்) பல சிறிய நாடுகளில், கலாச்சாரங்களில், மொழிச் சமூகங்களில் புத்துணர்வை ஊட்டியிருப்பதும் உண்மை. இந்தியாவிலும் பல ஆசிய, ஆஃபிரிக்க நாடுகளிலும் இணையத்திலும் கணிப்பொறியிலும் பல மொழிகள் இடம்பெற யூனிக்கோடு போன்ற நுட்பங்கள்  உதவியிருக்கின்றன. 

தமிழ், அரபு, வியத்நாம், கசாக் என பல மொழியினர்கள் தங்கள் தங்கள் இலக்கிய, கலாச்சார பதிவுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இந்த உள்ளூர்மயமாக்கம் உதவியிருக்கிறது. முதல் முறையாக இரண்டு நாளுக்கு முன் என் மனைவி அவரது சக ஊழியருக்கு நோகியா செல்பேசியில் தமிழில் எஸ்எம்எஸ் அனுப்பி, பதிலையும் பெற்றிருக்கிறார்.  

ஆனால், இந்தியாவில் எப்போதுமே இந்த உள்ளூர்மயமாக்கம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அதற்கான ஆதரவும் குறைவுதான்.  ஐரோப்பாவிலும் தென்கிழக்காசியாவிலும் வர்த்தகரீதியில் வலுவாகவும் கலாச்சார ரீதியில் அதிமுக்கிய அம்சமாகவும் இருக்கும் உள்ளூர்மயமாக்க நடவடிக்கைகள் இந்தியாவில் மேம்போக்கானதாகவும் சடங்குத்தனம் நிறைந்ததாகவுமே உள்ளன. அதற்கு காரணங்கள் பல. அதில் முக்கியமானது இந்திய மென்பொருள் நிபுணர்களின் அக்கறையின்மை.

இதோ அதற்கு ஒரு உதாரணம்.  மேலே உள்ள திரை-படம்.  

 இது மைக்ரோசாஃப்ட் ஆதரவில் நடத்தப்படும் பாஷாஇந்தியா (www.bhashaindia.com) என்ற வலையகத்தில் ஒரு பக்கம். தமிழ் கலைச்சொற்கள் குறித்த பகுதி இது. இந்த படத்தில் உள்ள  தமிழ்நாடு என்றாலே பரத நாட்டியம் என்கிற டூரிஸ்ட்த்தனமான மேட்டிமை இமேஜ் ஒரு பக்கம் இருக்கட்டும். பின்னணியில் உள்ள எழுத்துக்களைப் பாருங்கள். எல்லாம் தெலுங்கு எழுத்துகள். இந்த பக்கத்தை வடிவமைத்தவர், அதற்கு ஓகே போட்டவர், பிறகு பார்த்தவர்கள் என பலருக்கும் இப்படி இருப்பது ஏன் உறுத்தவில்லை? தமிழ் வலைப்பக்கத்தில் தெலுங்கு இருக்கக்கூடாதா என்று அசட்டுத்தனமாக கேட்கக்கூடாது.  இருக்கலாம். காரணம் இருந்தால். ஆனால், இந்த வலைப்பக்க வடிவமைப்பாளர்கள் முதல் பாஷாஇந்தியாவின் பொறுப்பாளர்கள் வரை உள்ளூர்மயமாக்கக் கோட்பாட்டை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் தான் இந்த படம். அவ்வளவு அக்கறையின்மை! இப்படி ஒரு கூத்தை வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாது.  இந்தியா போன்ற தாய்மொழி்யின் பலாபலன்களை அறியாத ஒரு நாட்டில்தான் பார்க்கமுடியும். இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான வலையகம் என்று சொல்லிக்கொள்ளும் பாஷாஇந்தியா.காமிலேயே இந்த நிலை என்றால்… வேறு என்ன சொல்ல? 

Comments (4)

ரூபி ஆன் ரெயில்ஸ்

நான் ஒரு புரோகிராமர் கிடையாது.  ஆனால் வழக்கமாக எல்லோரும் பொன்னியின் செல்வனைப் படிப்பது போல நான் புரோகிராமிங் மொழிகளை அறிமுகப்படுத்தும் புத்தகங்களைப் படிப்பேன். (அதாவது, வேறு எந்த நிஜமான இயற்கை மொழியின் இலக்கண புத்தகங்கள் கிடைக்காதவிடத்து).

அப்படி சமீபத்தில் நான் படித்து இன்புற்ற ஒரு மொழி ரூபி.  அதுவும் வலையகங்களை உருவாக்குவதற்கான ரூபி ஆன் ரெயில்ஸ் என்ற உருவாக்க சட்டகம் பற்றி படித்த போது இன்னும் கொஞ்சநாளில் அமெச்சூர் புரோகிராமர்கள் கூட பெரிய பெரிய வலையகங்களை உருவாக்கிவிடலாம் போல இருக்கிறதே என்ற ஆகமாட்டாத ஒரு எதிர்பார்ப்பும் தோன்றியது.

ஆனால் இந்த பதிவை நான் அதற்காகப் போடவி்ல்லை.  http://qa.poignantguide.net என்ற வலையகத்துக்குச் சென்று அங்கே ரூபி மொழியை அறிமுகப்படுத்தும் ஒரு அட்டகாசமான புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.  மென்பொருள் இலக்கியம் என்றால் அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றும்.

எல்லா நிரல்மொழிகளும் அமெரிக்காவில் தோன்ற, ஜப்பானில் தோன்றியது ரூபி. மற்ற நிரல்மொழிகள் எல்லாம் நிரல்மொழியாளர்களுக்காக இருக்க, குப்பனுக்கும் சுப்பனுக்கும் (குப்பன், சுப்பன் என்பெதல்லாம் இயற்கை மொழியில் உள்ள variables) எழுதப்பட்ட மொழி ரூபி.

ரூபி ஆன் ரெயில்ஸ் மீது காதல் கொண்டோர் என்னோடு தொடர்புகொள்ளுங்கள். சும்மா ஆர அமர கதைப்போம்.

Comments (3)

பீட்டா கவிதைகள் 2

  

குழந்தைகள் கிளிஷேக்கள்

குழந்தைகள் கிளிஷேக்கள்.
எனினும்
ஒரு கவிஞனாலும் அவற்றினும் புதுமை செய்யவியலாது.

வாய் குழைத்து கை நீட்டியது,
மார்பில் மூச்சா போனது,
பூச்சி விழும் சப்தத்துக்கும் திடுக்கிட்டழுதது,
என மாறாப் பிள்ளைத்தமிழ்கள்
ஒவ்வொருவரின் நாட்குறிப்பிலும்.

அது தாயின் முலைக்காம்பை நோக்கி பாயும் விதமும்
தந்தையின் மீசைக் கண்டு விழிக்கும் விதமும் மாறியதில்லை.
காலத்தின் ஒரே நம்பிக்கை
கையில் ஈரம் படர கால்களை உதைத்துக்கொண்டிருக்கிறது.
இந்த குழந்தை ஒருநாள் பயங்கரவாதியாகலாம்.
பிச்சைக்காரியாகவோ டெய்லராகவோ ஆகலாம்.
டீச்சராக, இல்லத்தரசியாக ஆகலாம்.
முரட்டு எஜமானனாகவோ தூக்கிலிடுவோனாகவோ ஆகலாம்.
கடன்காரனிடம் மாட்டிக்கொள்ளாமலிருக்க செல்ஃபோனை அணைத்து வைக்கலாம்.

இந்த குழந்தை அந்த குழந்தையை ரேப் செய்யலாம்.
வேடிக்கை, வினோதம், விதிவசம்!
யாரும் அவர்களின் குழந்தைகளை
- எதிர்கால பயங்கரவாதி, பிச்சைக்காரி, இன்னோரன்னர் என்றன்றி-
குழந்தைகளாகத்தான் பார்க்கிறார்கள்.

இப்படித்தான் நாமும் முன்பிருந்தோம்
என்பதை நான் நம்புவதற்கில்லை.
எனது குழந்தையின் இந்த பருவத்தை
பாவியான நான் கடந்திருக்கவே இயலாது.

இவ்வளவு வெளிச்சத்துடனும் எதிர்பார்ப்பின்றியும்
ஒரு புன்னகையையும் நான் பூத்திருக்க மாட்டேன்.

 

அதனதன்

ஆறு நாணல்களுக்காக ஓடுவதில்லை
நாண்ல்கள் கரைகாக்க நிற்கவில்லை.
மீனும் மீன்கொத்தியும் உடன்பாடுகளுடன் பிறக்கவில்லை.
யாரும் யாரும் யாராகியரோ?
நான் கொடுத்த காசுக்கு
நீ தருகிறாய் நாலு இட்லி, கால் ஸ்பூன் சட்னி.
சில்லரை, இல்லையேல் சாக்லட்.

கதை இத்தோடு முடியவேண்டும் தானே?

குறுங்கவிதை ஒன்று

“விட்டுவிடுங்கள்.”

“சரி.”

குழந்தைமை

இழப்பதற்கென்றே ஒரு பருவம்.
உனக்கு இழப்பதற்கு எல்லாம் இருக்கிறது.
பெறுவதற்கோர் பொய்யுலகமும் உண்டு.

என் சின்னஞ்சிறு பெண்ணே,
காலம் உறைந்து நிற்கட்டும் என்று சபிக்க வாய்ப்பில்லாத எனக்கு
நீ பார்க்கிற பார்வைகளை நினைவில் உறைவித்து
எடுத்து வைக்கும் திறனாவது இருப்பின்,
கடவுள் உண்டென்று ஒப்புக்கொள்வேன்.

இரவுப்பயணம்

மோட்டலில் நின்றது பஸ்.

தூக்கக் கலக்கத்தில்
சிறுநீர் குடிக்கவும் டீ கழிக்கவும்
இறங்கினேன். திரும்பினேன்.

எல்லா ஆம்னி பஸ்களும் ஒரே மாதிரியாக.
எதிலும் இல்லை ஊர்ப்பெயர் பலகைகள்.
மதுரை – சென்னை, சென்னை -மதுரை எல்லாம் ஒன்றுதான்.

என் மார்க்க வாகனம் எது?
இதுதான் என்று உத்தேச உத்தரவாதமாய் ஏறிய பஸ்ஸில்
அடையாளம் ஏதும் உள்ளும் இல்லை.

ஊரில் ஏறும் போதே இருட்டு.
எதுவும் பதிந்திருக்கவில்லை.

இது என் சூட்கேஸ். பக்கத்து சூட்கேசும் அதே மாதிரி இருந்தது.
திறந்து பார்த்தல் நாகரீகமில்லை.
என் பெட்டியில் பெயரொட்டுவதோ பூட்டுப் போடுவதோ கிடையாது.
இது என் வாட்டர் பாட்டில். பக்கத்து பாட்டிலும் அதே கம்பெனி.
குடித்திருந்த அளவும் அதேதான்.

பக்கத்தில் இருந்தவன் வரட்டும் எனக் காத்திருந்தேன். வந்தார்.
இருட்டில் ஏறுகையில் முக அடையாளம் பார்க்கவில்லை.
உட்கார்ந்திருந்த நான்கு மணி நேரமும் முகம் பார்க்கவில்லை.

“நீங்கள் தான் என் பக்கத்துச் சீட்டுக்காரரா?”
“உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்களும் எங்கள் பக்கத்துச் சீட்டுக்காரரா என என்னால் தீர்மானிக்கவியலவில்லை”
பக்கத்து வீட்டுக்காரனே தெரியாதாம் அவனுக்கு.

“வண்டி மாறி ஏறிவிட்டிருப்போமோ?”
“ஒரு வேளை நானும் மாறிப்போயிருக்கலாம்.”
“வண்டி எடுக்கட்டும், பார்க்கலாம், “அநேகமாக, அதே சரத்குமார் படம் தொடரலாம்.”
“எல்லா வண்டியிலும் அதே படம் தான் ஓடும்.”
துணிந்து அமர்ந்தேன்.

சென்னை மார்க்கமோ, மதுரை மார்க்கமோ வண்டி திரும்பியது.

நிமிடங்களில் என்னை சூழ்ந்து அமைதியாக்கிய துயில் மட்டும்
கலைந்ததற்கு முன்பிருந்ததன் தொடர்ச்சிதான்.

முடிந்த விஷயம்

சாலை ஓரத்திலிருந்து சில அடி தூரம்.
மறைக்கத் திறனற்ற ஓணான் செடிக்கூட்டம்.
முக்கால் நிலவு வானில்.
சாயுங்காலம் தான் இன்னும்.
இன்னும் ஏழெட்டு வண்டிகள் பாக்கி.
எனினும், அவசர அவசரமாய்
நான் இடம்கொடுத்தேன் அவனுக்கு.

அனுமதிக்கப்பட்ட மணித்துளிகள்
மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்தும்
அந்த நிலவு மீண்டும் உதித்ததில்லை
என் புகுந்த வீட்டின் முற்றத்தில் பின்.

திட்டமிடல்

திட்டமிட்டு கவிதை எழுதமுடியாது.
முன்தேதியிட்ட காசோலை கொண்டு
சிவப்பு விளக்குப் பகுதிக்கு செல்லமுடியாது.
திட்டமிட்டு செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.
திட்டமிடல்.

Comments (4)