தமிழ்நாட்டில் வழக்கமாக விவசாயமோ வேறு குடும்பத் தொழிலிலோ அலுவலக வேலையிலோ ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு தொழில்முனைவோர் உருவாவது அவ்வளவு சுலபமல்ல. இங்கே தொழில்முனைவோர் என்று நான் சொல்வது தொழில் தொடங்குகிற அத்தனை பேரையும் அல்ல. தொழிலதிபராக வளர்ந்து, ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்து, நிறுவனமயப்படுத்தப்பட்ட பிஸினஸை செய்பவர்களை மட்டுமே. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் நேற்றைய/இன்றைய வெற்றிகரமான முதல் தலைமுறைத் தொழில்முனைவோர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பது என் நீண்டநாள் அவா. ஒருவகையில் அதில் சுயநலமும் இருக்கிறது.
நானும் ஒரு முதல் தலைமுறைத் தொழில்முனைவோன்தான். எனது தாத்தா காலம் வரை எங்கள் மூதாதையர்கள் பரம ஏழையான நெசவாளர்கள். எனது அப்பா நெசவுத் தொழில் செய்துகொண்டே படித்து, வித்துவான் பட்டம் வாங்கி, ஆசிரியாக ஆனவர். அவர் ஓய்வு பெறும்போது தலைமையாசிரியராக இருந்தார். என் அம்மா அஞ்சாங்கிளாஸ். எனது சொந்தத்தில் யாரும் பிஸினஸ் கிடையாது. தூரத்து சொந்தங்களில் சில வியாபாரிகள் உண்டு. நான் ஒரு நல்ல டாக்டராகவோ பொறியாளராகவோ அல்லது அதிகாரியாகவோ ஆகவேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. கொஞ்சகாலம் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் வேலை செய்த நான், பிறகு ‘தொழில்முனைப்பு பூச்சிக் கடித்து’, பிஸினஸ் தொடங்கினேன். என் வாழ்க்கைத்துணைவியாரின் ஒரே ஆதரவைத் தவிர, எனக்கு வெளிப்படையான, மனப்பூர்வமான ஆதரவு என் சுற்றத்தில் யாருமில்லை. நாற்பது, அம்பதாயிரம் சம்பளம் வாங்க வேண்டிய புள்ளை, பிஸினஸ், அது இதுன்னு வாழ்க்கையை வீணாக்குகிறான் என்கிறார்கள் சிலர். மாட்டை மேய்த்தோமா, கோலைப் போட்டாமா என்றில்லாமல் இது என்ன வேலை என்கிறார் ஒருவர். டிரைவர்களெல்லாம் பஸ் ஓனர்களாக ஆக முயற்சிக்கக்கூடாது என்கிறார் என் அப்பா. இவ்வளவு வருஷம் ஆச்சு, பிஸினஸ் உனக்கு சரிப்பட்டு வராது, ஒழுங்கா வேலைக்குப் போ என்று அறிவுரைக்கும் நலன்விரும்பிகள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவி்ல் ஒரு பாட்டுக்குள் பணக்காரனாகும் வித்தை எனக்குத் தெரியவில்லை என்பதே ஆதங்கம். இதற்கிடையில் நாலஞ்சு வென்ட்ச்சர்களைத் தொடங்கி, அடிபட்டு, சற்றே தேறி, இப்போது ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தை நடத்திவருகிறேன். ஆழி என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கியிருக்கிறேன்.
இன்று வெற்றிகரமாக பிஸினஸில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் என்னை விட நிறைய கஷ்டங்களை அனுபதித்திருக்கிறார்கள். நிறைய rags to riches கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான ஒரு வழி தான் புத்தகம் எழுதுவது. இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற ஆசையை இப்போது நடைமுறைப்படுத்த விரும்புகிறேன்.
ஆனால் இதில் உங்கள் உதவியும் தேவை
- நீங்களும் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
- அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் அப்படி இருந்தால் அறிமுகப்படுத்துங்கள்
- நீங்கள் வியந்து போற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் – இன்றைய வெற்றிகரமான தொழிலதிபர்கள் – அவர்கள் பிரபலமானவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயமி்ல்லை- குறித்து டிப்ஸ் கொடுங்கள். அவர்களையெல்லாம் சந்தித்து உரையாடி, வலுவான தகவல் புலத்துடனும் அறிவுச் செல்வத்துடனும் அந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.
கை கொடுங்களேன்!