Archive for September, 2006

புலவன் புலம்பல்

இஃது அஃதன்று, அஃது வேறு.
அஃது உஃதன்று, இஃதுமன்று.
எஃது இஃதென்று அறியாத போது,
சிறுங்காதல் வந்து சிந்தையைக் குடைந்தது.

சிம்ரன், ஜோதிகா வரிசையினள் அவள்.
முகவரி அறியேன். பெயரும் தேடேன்.
கண் பார்த்த விஷயங்கள் போதும்.
பறந்து வந்த காற்றில்
பதிந்து சென்ற கண்ணோட்டம் போதும்

ஒரு செமஸ்டர்காலத்தில் அவளுடைய எதிரியாவது உறுதி.
புலமை படிக்க வந்தோனுக்கு
பொருளியல் மேல் என்ன ஆசை?

யாமோ, காமத்துப்பால் கசடற கற்றோன்.
தலைவியர் மடக்கும் தலைவன். எனினும்
பொருட்பாலள் மயக்கும் வித்தை அறிந்திலேன்.
கெய்னீசியன் கோட்பாடுகளைவிட
பெருமந்த காலத்தின் ஒப்பாரியைவிட
நியூயார்க் முதல் நியூயார்க் வரை
24 மணிநேர ஃபண்ட் மானேஜர்களின் கத்தல்களைவிட
சாலச்சிறந்ததோர் சரக்குண்டு எம்மிடம்.

அவள் வரமாட்டாள்.
யானோரு பி.பீ.ஓ. சரக்கல்லன்.
புங்கமரக்காட்டு கல்லூரியொன்றில்
தமிழ் விரிவுரையாளனாய் நாளை ஒருநாள்
தேமா, புளிமா போதிக்கக் காத்திருக்கும்,
இனிதிது, இன்னாதிதுவென
வறண்ட வகுப்பறையில் வளவளக்க தயாராகும்,
விதியின் கையாள் யான்.
நீர்வழி்ப்படும் புணைபோல்
ஓர் வழிப்பட்டு செல்லும் நாளை எதிர்நோக்கி நிற்போன்.
வாராள் என் தலைவி.

குறுந்தொகை கொண்டோன், சிலேடையில் சிறந்தவன்.
கார்மேகத்தின் அடிப்பொடி, குறவஞ்சியின் ரசிகன்.
ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன்
அவளை அழைப்பேன் சுவர்க்க வாயில்வரை.
கைவல்ய நவநீதம் காட்டி மகிழ்வேன்.

எல்லா சரக்கும் யாமறிவோம் எனினும்
யானோரு ஐ.டி. சரக்கல்லன்.
திருமால் அறிவேன், ஷாப்பிங் மால் அன்று.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிக.
காதல், இயற்கையிலேயே கண்டதும் வருமோ?
பின்புலம், முன்புலம், எதிர்நாள் ஏக்கம்
காத்தலின் நிச்சயம், கடவுச்சீட்டுகள்,
விசா, பிஸ்ஸா, சேஃபர் செக்சுமென
எல்லாம் முகத்தில் பிரதிபலிக்குமோர்
ஸ்டெல்லா மேரிசின் சிகைவண்ணம் மாற்றும்
செவ்விளங் குமரிக்கு?

தீயின் பிழம்பொன்று என்வயிறு புகுந்திட,
இன்று
காரில் வந்த ஓர் கயவன் அவளை
கொத்திச்செல்வதைக் கண்டேன்.
சாலமன் பாப்பையா சரியாய்ச் சொன்னார்:
அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா.

அவற்றாயும் இவற்றாயும் ஒரு கிளப்பின் மாக்கள்.
அந்தையும் இந்தையும் வரிகொடு வரம்பினர்.
ஆதலின்,
செம்புலப் பெயல்நீர் செப்படி வித்தை வேண்டாது,
இன்றைக்கு காலம் இனிதே நிறைய
டேட்டிங், ச்சாட்டிங், ஷாப்பிங், கீப்பிங்…

வாராள் தலைவி, வழிதவறினோளே.
எமக்கு,
எந்தையும் தாயும் தம்கடன் மறவாது,
தட்சணை அளந்து, தடவிப்பார்த்து
கொணர்வர் ஒரு குமரியை நாளை.

அஃது வரை,
எஃதும் நமதன்று, இஃதும் நமதன்றாதலின்,
காயத்ரிகளை வியத்தலும் இலமே.
கண்ணம்மாக்களை இகழ்தல் அதனினும் இலமே.
 
 
 

Comments (6)

பீட்டா கவிதைகள்

என் பையனின் ஹெட்மிஸஸ்
பண்ண முட்டாள்தனம்

பாடம் நடந்தது,
தூக்கம் வந்தது,
வெளியே பாத்தேன்
டவர் தெரிந்சிது
பிடிச்சுப் போச்சு
பாத்துகிட்டே இருந்தேன்

பெஞ்ச் மேல் ஏறுன்னு
சொன்னாங்க மிஸ்.
இப்போ டவர்
தெரிஞ்சுது
இன்னும் நல்லா.
பிடிச்சுப் போச்சு
பாத்துகிட்டே இருந்தேன்.

வெளியே போன்னு
சொன்னாங்க மிஸ்.
அவங்கள எனக்கு
ரொம்ப பிடிக்கும்பா.
வெளியே போனேன்.
இப்போ டவர்
ஃபுல்லா தெரிஞ்சது.
பிடிச்சுப்போச்சு.
பாத்துகிட்டே இருந்தேன்.

ஹெட்மிஸஸ் வந்தாங்க.
என்னன்னு கேட்டாங்க.
இன்னன்னு சொன்னேன்.
அவங்க முட்டாள்பா.
மிஸ் என்ன
ஃபனிஷ் பண்ணாங்கன்னு
சொல்லாறாங்கப்பா.

நன்றியறிதல்

சுடப்பட்ட துப்பாக்கி ரவையைப் போல
வரலாறு இழந்தவனின்
முகத்தில் அறைந்து செல்லும்
கோபம் தணியாத காற்றின்
ஏக்கங்கள் தெளிவானவை.
நீதான் அதற்கு நன்றி சொல்ல மறந்தாய்.

காற்றைப்போல நண்பன் யாருமில்லை.
காற்று ஒரு விஷயத்தை மறப்பதில்லை.
பருவகாலங்களில் மேகங்களின் வடிவங்களையும்
வலசைப் பறவைகளின் வழிச்செலவையும்
புயலின் போது தூக்கியெறியப்படும்
பொருள்கள் வீழும் எறிபாதையையும்
அது மாற்றியதேயில்லை.

பனிக்காற்றும் புயல்காற்றும் சூறையும்
தென்றலும் புழுதிக்காற்றும்
பிரளயக்காற்றும் எரிமலை தழுவிய தழல்காற்றும்
சுடுகாட்டு பூமாலைகளின் நாற்றம் தழுவியதொன்றும்
காமம் நிறைந்து பரவிய
அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
புகையுடன் நிறைந்து
ஏசியில் நடுங்கிச்செத்த இன்னொன்றும் என
காற்றின் உலகுகள் நிறைய உண்டு
இப்பிரபஞ்சம் முழுக்க.

நீ அதிர்ஷ்டக்காரன் அன்றோ?

உன் கடைசி மூச்சுக்குப் பிறகு எரிதழலைத் தாலாட்டவுள்ள காற்றை
காதலாகி கசிந்துருகி கட்டிலா வெளியில் தழுவலாம்.
நன்றி தெரிவிக்கும் முகத்தான் அதனுள்
உயர்ந்த சிகரெட் புகையை மட்டும் உட்செலுத்தலாம்.
சட்டையின்றி அழுக்கேறிப்போன உன் அக்குளை அதற்கு காட்டாதே.
அநாகரிகத்தின் உச்சம் அது.

நேற்று, ஒரு ஷாப்பிங்மாலில்
நற்காற்று உருவாக்கிTM எந்திரத்தைப் பார்த்து
மிரண்டுபோயிருந்த என் மனம்
கார்காலத்தின் முதல் ச்சில்காற்றின்
வருடலில்தான் நெகிழ்ந்தது.

காற்று நன்று.
வெற்றிகரமான இரவுகளின் நடுவில்
உனது நன்றியை பெருமூச்சினூடாக
தெரிவித்தல் இயலாது இல்லையெனில்.
அவள் தோளில் அழுந்த படிந்த
உன் வன்மத்தை மெல்லென ஊதி
இளக்கவும் இயலாது.

இரு மலைப்பாறைகளுக்கிடையில்
பேரூழியாய் வளைந்துசென்று
பள்ளத்தாக்கில்
ஹோவென விரிந்து விடுபெறும்
காற்றை நினைவுறுத்தும் விதமாக,
உங்கள் இருவரின் இறுக்கத்தின் போது
அடிவயிறுகளின் இடைவெளிக்குள்
புகாமல் நிறுத்தி,
ஒரு மென்புன்னகையோடு காற்று வெட்கித்திரும்ப,
மாறா அன்புப் பதிவேட்டில் மேலும் ஒரு கையொப்பமிட்டு
குடும்பம் சிதையாமல் பார்த்துக்கொள்கிறீர்களே,
அதற்காக சொல்லுங்கள் ஒரு நன்றியை.

எத்தனை கோடானுகோடி நன்றிகள்
சுமந்த காற்று அது. எனினும்…

பெறுவதற்கோர் பொன்னுலகம்

நிரல்வரிகளின் நிழலிலிருந்து மீண்டு
சற்றே ஆக்ஸிஜன் ஏற்றிக்கொள்ளும்
பொருட்டு வெளியே சென்ற போது,
பெருமிதம் கொண்டது என் நெஞ்சு.
இன்று கிடைத்தது எனக்கு பதவி உயர்வு.
அடுத்தமாதம் இந்த நாள்
செல்வேன் நான் செல்வச்சீமைக்கு.

மென்வல்லரசின் குடிமக்கள் யாம்.
ஏகாதிபத்தியத்திற்கு யாம் வழங்கிய
எஃபெக்ட்டிவான ERP Solutions ஆல்
கிடைக்க பணத்தில்
அடுத்த ஆயிரம் பேர் வீட்டில்
அடுப்பு எரியும், அறுவகை சுவை தர.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத்,
பிலிப்பைன்ஸ், வியத்நாம், எஸ்டோனியா.
எங்கும் பரவும் மேகப்பிரதிபலிப்பு வானாளாவிகளில்
எனக்கென்று ஒரு வானம், ஒரு உலகம்,
ஒரு மல்ட்டி கரன்சி பாங்க் அக்கவுண்ட்.

எனக்கென விரிகிறது சர்வீஸ் சந்தை.
கேட்காமல் குவியும் கிரெடிக் கார்டுகள்.
என் நிதியை நிர்வகிக்க 274 கன்ஸல்ட்ன்ட்கள்.
கல்யாண சந்தையில் டாக்டர்களைத்
தீர்த்துக்கட்டியவன்.
மிகவும் ஸ்மார்ட் ஆனவன்.
எடைக்கு எடை தங்கமனசு.

கான்டலீஸியா ரைஸா, ஹிலாரி கிளின்ட்டனா
தேர்வு செய்வேன் நான்.
அவுட்சோர்ஸிங் மறுப்பாளை அமெரிக்கா மறுக்கும்.
நாட்டின் வெளியுறவுக்கொள்கைக்கும் என்னிடம்
உண்டு டெம்ள்ப்ளேட்கள்.
நான் புறநகர்களில் மண்தரைகளை
பொன்தரைகளாக மாற்றியவன்.
சென்ட்ரல் பிஸினஸ் டிஸ்டிரிக்டில்
எக்ஸ்ட்ரா டீலக்ஸ் லக்ஷூரி அபார்ட்மென்ட்டில்
சதுர அடி 4k தானாம். வொர்த்டா மாங்கா.
க்ளோஸ் த டீல்!

வன்பொருள், மென்பொருள், என்பொருள்.
இனி ஏன் நான் டே டிரேடிங்கிலும் இறங்கக்கூடாது?
பாருங்கள், தந்தையரே பாருங்கள்.
இது புதிய இந்தியா.

நான்காம் உலகநாடுகளின் புதுச்சந்தைப் போக்குகளை
நன்கறிந்த கேபிஓ கம்பெனியில்
என் தோழி இருக்கையில் எனக்கென்ன கவலை
இவ்வீக்கெண்ட் குறித்து?
கீழ்க்கடற்கரை சாலையில்
மேல்கலாச்சார சாரலில்
நூறாவது முறையாக மீறுவேன் எல்லையை.

இந்திய மூளைகளா கொம்பா!
ஆன்சைட் பயணத்தின் போது கண்டேன்.
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸில் கையெடுத்து கும்பிட்டு,
காலை உணவாக இட்லி.
சுடச்சுடத் தந்தார்கள்
கிழக்கிந்திய கம்பெனியின் ஆவி பறக்க.

இங்கேயோ,
விரிக்கும் சிறகுகளில் பறக்கும் இந்தியக்கனவுக்கு
மேலும் மேலும் வேண்டுவது இன்டர்நேஷனல் ஏர்போர்ட்கள்.
வேளாண் நிலங்களில் டாலர் அறுவடை செய்ய
மேலும் மேலும் கிரீன்ஃபீல்ட் புராஜெக்ட்கள்.

எல்லாம் சரியென்றபோதிலும்
எதிர்த்து நிற்கிறார்கள் காரட்களும் கவுடாக்களும்
வேண்டுமாம் அவர்களுக்கு ரூரல் ரெவல்யூஷன்.
போங்கடா எங்கேயாவது போஸ்னியாவுக்கு என்பேன்.

லட்சத்தில் நாங்கள் சம்பாதிக்கிறோம் என்றால்
உனக்கேன் வயிற்றெரிச்சல்.
உனக்கு வேண்டுமா, போய் ஜாவா படி.

மின்வெளியில் விற்க வெங்காயங்களுக்கும் தடையில்லை.
வறுமை ஒழிய சப்-10 பி.ஸி.
நோகியா ஃபோனில் வயலும் வாழ்வும்.
இனியேன் எதிர்க்கிறீர் புதியதோர் உலகை.

To: editor@sengathir.com
sub: Anti-globalization poetry
Attachment: pp.doc

நலம் தானே தோழர்,
நீங்கள் கேட்ட உலகமயமாக்க எதிர்ப்பு கவிதை
அட்டாச்மென்ட்டில்.
பூர்ஷ்வா பார்வை கொண்ட
ஒரு சாஃப்ட்வேர் புரபஷனில் பார்வையில் எழுதியது.
அவனது சுயநலம் தொழிலாளரை எரிச்சல்படுத்தும்.
பார்ட்டி தீர்மானத்துக்கும் பதமாக இருக்கும்.
யூனிகோட்டில் உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
வெளியிடுங்கள் ASAP.
மற்றபடி
விப்ரோவில் சேர்ந்த உங்கள் மகனுக்கு எப்போ கல்யாணம்?
மாட்ரீமோனியல் டாட்காமில் அவன் புகைப்படம் பார்த்தேன்.
பாப்பாரப் பையன் மாதிரி இருக்கான்யா.)

மிஸஸ். நாவலிஸ்ட்

நல்ல நூல்களை பொறுக்கித் தருவது
என் கணவரது பொறுப்பு.
அவ்வேளையில் காய்கறிகளை நறுக்கி
தயாராவது என் பொறுப்பு.
எப்போதும் நான்
படைப்பிலக்கியங்களை
சமையலறையில்தான்
வாசிப்பேன்.
அன்று சாம்பார் அடிபிடித்துவிட்டது
என்றால் நான் படித்தது ஒரு நல்ல
நாவலைத்தான் என்பதற்கு அறிகுறி.
ரசம் மிதமிஞ்சி கொதித்துவிட்டது என்றால்
அந்த சிறுகதைத் தொகுப்புக்கு
நிச்சயம் விருது
என்று அர்த்தம்.

தோசை சுடும்போதும் படிப்பாயோ
என்றார் கணவர்.
ஆம் என்றேன். முல்லாக் கதைகளை
அவ்வாறே படித்தேன்.
டின்னருக்கு இரண்டு பிள்ளைகள், மூன்று வயதானவர்கள்
மற்றும் கணவர்
என்றால் நான் எத்தனை
கவிதைகளைப் படித்திருப்பேன்
என்று கணக்குப் போடுங்கள்.
கடைசியில் எனக்கும் இரண்டு அடைகள்.

நாவாலாசிரியரான என் கணவருக்கு
இப்படி ஒரு மனைவி வாய்த்ததில்
பெருமிதமே.
இப்படி ஒரு இலக்கியவாதி என்
ஆம்படையானானதில் எனக்கும் சந்தோஷமே.

அதனால்தான் வெளிவரும் போதெல்லாம்
அவரது நாவலின்
முதல்பிரதியை பைண்டிங் வாசம்
தீருமுன் என்னிடம் தருவார்.
நான் சமையலறைக்குச் செல்வேன்.
அன்று அவருக்கு
அட்டகாசமான விருந்துதான்.

நாடகம்

உனக்கு விருப்பம் இல்லையெனில்
நடையைக்கட்டு.
காதலின் நூறாவது கட்டுக்கதை இது.
காமம் இல்லை. கர்வம் இல்லை.
கவிதை இல்லை. கவலையும் இல்லை.
நீ நான் நாம் என உறவும் இல்லை.
ஊடலும் இல்லை.

பெரியதோர் இரும்புக்கோட்டையின் எஃகுக் கதவுகளுக்கு அப்பால்
சிறைபட்டிருக்கும் இளவரசியும் இல்லை நீ.
உன்னை மீட்கும் எவ்வித பொறுப்பும் எனக்கும் இல்லை.

உனது மனத்தின் கனம்
ஒரு மெல்லிய சாம்பல் படலத்தினும்
மெல்லிது.
கடல் அலைகளின் கரைப்பிடிப்பினும்
குறைந்த பற்றுதல் அது.

வெயில்நேரத்தில் உனக்கொரு
ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுக்க
முடியாதபோது
என் வருங்கால இல்லறம்
குறித்து கவலை கொண்டாய்.
நோகா காதலென்று எதுவுமில்லை
என்றாய். நோகட்டும்.
நெருப்பு தணிந்தது என நினைத்தேன்.
பின், ஏன் எஸ்எம்எஸ்ஸில் வரவில்லை
இன்றைய ஏ-ஜோக்.

நமக்கென்று வேண்டாம்
பரஸ்பர எதிர்ப்பார்ப்புகள்,
உடன்பாடு ஒன்றை எட்டுவோம் என
அடையாறில் வைத்து நீ முன்மொழிந்த
கோட்பாடு என்னை அதிர்வுறச் செய்தது.

உன் பிறந்தநாளில்
அந்த புதிய சல்வார் கமீஸை
நான் வாங்கித்தந்த போது,
வேண்டாம் என புறக்கணித்தாய்.
புரிந்துகொண்டேன்.
ஒருதரப்பு ஒப்பந்தம் அமலில்.

உன் அப்பாவுக்கு கடமை உணர்வு மிகுந்து
ஜாதக புத்தகத்தை கையில் எடுத்த அதே நாளில்
காதல் மண்டையைப் போட்டது.

இது நடக்கும் என்று நமக்குத் தெரியும்.
நமக்குள் பொதுவாய் இருந்த ஒரே எதிர்பார்ப்பு
அது மட்டுமே.
எனினும், நாம் ஏன் ஒருநாளாவது காதலர்களாக நடிக்காமல் இருந்திருக்கக்கூடாது?
பிரிவு என்னும் பொய்மையை
இன்று பாடாமல் இருந்திருப்பேன்.
நீயும் சல்வார் கமீஸ் அணிந்திருப்பாய்.

ஒரு எல்.ஐ.சி. கவிதை

இந்த மாரிக்காலத்தில்,
தெருமுனையில் லாரியுடன்
என் வண்டி மோதி
டிரைவர் மரணித்தார்.

நீலநிறமான புகைமண்டலத்தின் குளிர்ந்த மூச்சுமூட்டலில்
டிரைவர் தனது கடைசி விபத்தை நிறைவேற்றிய
திருப்தியில் மறைந்தார்.
இனி அந்த சாலையில் நீங்கள் தைரியமாக நடந்து சென்றே
உங்கள் எதிர்வீட்டு அம்மாளிடம் கைமாற்றாக
சர்க்கரை வாங்கலாம்.

மேலும் மேலும் வண்டிகள் அந்த சாலையில்
முன்பு மோதப்பட்டதுண்டு.
வெற்றிகரமாக மோதி நிறுத்தியவன் நானே.

மாரிக்காலம் முழுமையாக தன் அர்ப்பணிப்போடு
பரந்திருந்தது அந்த சாலையின் ஓரங்களில்.
முதற் புற்கள், காளான்கள், சொதசொதப்பான வேர்கள்.
மரத்திலிருந்து குளிர்தாங்காமல் விழுந்தன சில புட்கள்.
அவற்றை நசுக்கிச்சென்றன சேறு அப்பிய சான்ட்ரோக்கள்.

எனது கண்களும் செருகின.
மூக்கில் இறங்கிய சேற்றில்
அடங்கபோகிறது என் இறுதி மூச்சு.
வண்டி கவிழ்ந்த அழகில்
எனது மார்பில் குத்திய இரும்புக்கம்பியின்
ஆழத்தில் என் தலைமுறை புதையுறப்போவதை காணச் சகிக்கவில்லை.
நீலநிற புகைமண்டலத்தின் குளிர்ந்த மூச்சுமுட்டலில்
டிரைவர் இறந்தது சனிக்கிழமை.
அவர் தனியாகவோ ஏகுவார் விண்ணுலகுக்கு?

என் அன்பான மனைவிக்கு வேண்டுகோள்.
குத்திய இதயம் குத்தியது தான்.
நீ மறக்காமல் லாரிக்காரன் மீது கேஸ் போடு.
என்னிடம் இல்லை எந்த ஆயுள் காப்பீடுகளும்.

தினசரி நான் டிவியில் குளித்துக்கொண்டிருந்த போது
எனக்கு நினைவுபடுத்தியிருந்தால்
ஒரு வேளை நான் சம்பாதித்திருப்பேன்.
அப்போது ஒருவேளை நான் இந்த பக்கமாக வந்திருக்கமாட்டேன்.
ஒருவேளை இது வார இறுதி நாள் இல்லை என்றால்
டிரைவரும் மெதுவாக வந்திருக்கலாம்.

கடவுளை மன்னிப்பதற்கில்லை

சுனாமி வருவதற்கு சில மாதங்கள் முன்பு
வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தேன்.
அற்புதமானதோர் தேவாலயத்தின்
மூடப்படாத கதவுகள்
என்னை நெடுங்காலமாக ஈர்த்துக்கொண்டிருந்தன.
நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாய்…

மண்டியிட்டுப்பார்த்தேன், கைகளை மார்பில் புதைத்து.
கடுமுயற்சி கொண்டு அழப்பார்த்தேன்.
தேவனோடு சிறிதுகணம் சேர்ந்து
சுவர்க்கத்தின் வாயிலை
தொலைதூரத்திலிருந்து
பாவங்களின் முகிற்கூட்டங்களினூடகவேனும் அல்லது
பெரும்புதர்க்குழியில் விழும் சாத்தானின் கரைச்சல்களுடையிலேனும்
பார்த்தே விடுவது என முயன்றேன்.
தோல்வி.
இறுதியில் ஒரு மலையாள ரெஸ்டாரன்ட்டில்
வேர்க்கடலையையொத்த அரிசிச்சோற்றைத் தின்றுவிட்டு
திரும்பியதுதான் மிச்சம். மீன் குழும்பு நன்று.

கழுவேற்றப்பட்ட ஆயிரம்லட்சம் சமணர்களை மறந்துவிட்டு
போனால் போகட்டும் என சோமசுந்தரரைத் தொழப் போனேன்.
காதலாகி கசிந்து மல்க ஆனது மட்டும் முயன்று,
அன்று பழகிய திருவாசகத்தை மீண்டும் சொல்லிப்பார்த்து,
பொன்னார் மேனியனின் அடியில் விழ முயன்று,
தோல்வி.
இறுதியில் என் பிள்ளைக்கு பொம்மை கார் வாங்கிக்கொண்டு
சுண்டலைச்சாப்பிட்டுவிட்டு திரும்பியதுதான் மிச்சம்.

கடவுளை நான் கைவிட்டுவிட்டேன்.
அவர் எனக்குக்குள் வரமறுத்தார்.

ஒருமுறை புத்தரிடம் சென்றேன்.
நல்லவேளை இவர் இன்னும் இலங்கையில் கொல்லப்படவில்லை.
இவருக்கு உதவியாக ஜப்பானியர்கள் இன்னும் ரோபாட்களை உருவாக்கிவிடவில்லை.
துரதிருஷ்டவசமாக அவர் எனக்குப் பிடித்துப்போயிற்று.
இவரது சீனச் சிரிப்பு எனக்கு பிடிக்கும்.
முட்டாள் இந்தியர்களின் மிகப்பெரிய ஏற்றுமதி இவர்தான்.
ஆனால் அவரிடம் இல்லை கடவுள் ஈர்ப்பாற்றல்.

அற்புத சித்திகளை அறியாத நபிகளோடு எனக்கு விருப்பம் இல்லை. சுத்த போர்.

யாரையும் நான் நம்பத்தயாரில்லை குரு அவர்களே.
எனக்குள் தேடவும் இஷ்டமில்லை.
எனக்குள் இருப்பது கனவுகளின் சுரங்கம் மட்டுமே.

கடவுளை விரட்டிவிட்டு
நான் சுகமாக இருக்கிறேன் என்பதை
யாரும் நம்பவில்லை.

மழை பெய்வதுபோல் இயல்பானது அது.
கேள்வியும் இல்லை, பதிலும் வேண்டாம்.
நீ ஏன் மலைச்சிகரங்களை அடகுவைத்தவனைப் போல
துடிக்கிறாய்?
பனி உருகுவது போல இயல்பானது அது.
கடவுளை நான் கண்டுகொள்வதில்லை..
இது ஏன் உனக்கு பிரச்னை அளிக்கிறது?
ஆறுகளிடமிருந்து கடன் வாங்கியவனைப் போலத் துடிக்கிறாய்?
நீ எப்போது தெய்வத்தின் ஏஜென்ட் ஆனாய்?
நான் எப்போது உன்னை எனது அதிகாரபூர்வ ஆத்மநிர்வாகி ஆக்கினேன்?

திறவாத கோயில்களே கோயில்கள்.
வணங்காத தெய்வங்களே தெய்வங்கள்.
செல்லாத நெறியே நெறி.
கடக்காத வானமே வானம்.
போதுமா என்வசமுள்ள சரக்கு? நீ நடையைக் கட்டு.

நான் கடவுளோடு கடைசியில் சண்டைபோட்டது
1996இல். அத்தோடு முடிந்தது சகவாசமெல்லாம்.
அவரவர் வழியில் குறுக்கீடு இல்லை.

ஒருமுறை மும்பை குண்டுவெடிப்பில் அவர் இடது கால் பிய்த்தெறிந்துகொண்டு போனது என்று கேள்விப்பட்டு
வருந்தியபிறகு
மேலும் கூடுதல் நம்பிக்கையை நான் வைத்தது சிலந்தியிடம் மட்டுமே.
சூடு சுரணையின்றி கடவுள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறார்?
இது தவறான முன்னுதாரணம்.
கடவுள் பயங்கரவாதிக்கு பணிந்துவிட்டார்.

பனி பார்த்தது

கடலுக்கு அப்பால் அப்பாவின் கப்பல்.
உறைபனிப்பருவம் தொடங்கியது.
மூர்மான்ஸ்க் துறைமுகத்தில் எல்லோருக்கும் விடுமுறை.
சிறிய மகன் கரையில் காத்திருக்கிறான்.
பனி உருக வேண்டும்.
அப்பா வருவார் அப்போதுதான்.
பொம்மையும் புதுச்சட்டையும் வரும்…

பனி உருகவேண்டும் என்ற அந்த ருஷ்ய சிறுகதையை
நான் இன்னும் மறந்திருக்கவில்லை.

சிறுவயதில் பனியைப் பற்றி நிறையப்
படித்திருக்கிறேன்.
ஏகப்பட்ட கதைப்புத்தகங்கள்.
எல்லோம் ஐரோப்பிய கதைகள்.
பனி மோகம் பிடித்தது அப்போதுதான்.

என் ஊர் ஒரு ஊரே அல்ல.
என் நாடு ஒரு நாடே அல்ல.
என் வானம் ஓரவஞ்சனை மிக்கது.
இங்கே பனி பொழிவதில்லை.

நான் முதலில் பனி பார்த்தது
ஒரு பின்லாந்து நகரத்தில்.
ஆர்ட்டிக் வட்டத்துக்கு கீழே
நூறே கிலோமீட்டர் தொலைவில்.

முதல் காதல் கெட்டது போங்கள்.
முதல் முயக்கம் என்ன செய்யும் அதை?

ஹோட்டலின் பெருங்கண்ணாடி ஜன்னலில்
வெளியே பனிக்கொட்டியதைப் பார்த்து
காணாது கண்டதைப் போல நான் ஓட
சக ஐரோப்பிய தங்குநர்கள் சிரித்திருப்பார்கள்.

ரிசப்ஷனிஸ்ட் அறிவாள் என்னை.
சொல்லி வைத்திருந்ததைப் போல
பனி பொழியத் தொடங்கிய போது
இன்டர்காமில் சொன்னாள்.
You’re lucky, Shentyll. It’s snowing out there”

அந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவென்றாள்.
அதிர்ஷ்டம். பேரதிருஷ்டம்.

அதை எவ்விதம் சொல்வேன்?
கபில பரணர்களும் சொல்லாத உவமைகளுக்கு
செல்வதெங்கே.
இங்கே பனி பொழிவதில்லை.

மீச்சிறு முல்லைப் பூக்களின் மாரியோ, அல்லது
குளிர்ந்த கண்ணாடித்துண்டுகளின் மெல்லிறக்கமோ, அல்லது
சிதறுண்ட ஆலங்கட்டிகளின் சாரல்விழாவோ, அல்லது
துருவிய தேங்காய்த்துண்டுகள் குளிர்த்தென்றலில் இறுகிச் சிதறிவிழுகின்றவோ, அல்லது..

தீர்ந்துபோனதென் உவமைவங்கி.

பொழிபனியில் நடந்தேன்.
கால் அமிழ அரையடி பனிப்படலம்.
கூரைகள்மீது வெண்திரை போர்த்தி,
மரங்களில் பனிவண்ணம் தீட்டி,
சாலை விளக்குகளின் ஒளிவட்டத்தில்
ஈசல்கள் போலத் தோன்றி,
என் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொட்டிக்கொண்ட பனித்தேவதையே, நீ செத்தொழி.

குட்டிப்பயலானேன், சாலையில்
எகிறி குதித்து அதன் மீதே இறங்கினேன்.
என்னைக் கடந்து சென்ற கார்கள்
வளைவில் ஆட்டம்கண்டு விழாமல் சென்றன.

நறுக் நறுக்கென என் ஷூவின் கீழ் சப்தம்.
மென்பனி இறக்கம், சரசரப்பு.

ஊவ்லு ஆறு உறைந்திருந்தது.
உறைந்தேன்.
உறைந்த ஆற்றை பார்த்திருக்கிறீரா நண்பரே தமிழ்நாட்டில்?
இது சபிக்கப்பட்ட தேசம்.
இங்கே பனி பொழிவதில்லை.

நாளை சம்பாதித்தால்
ஸ்டாக்ஹோமில் அல்லது நோவஸிபீர்ஸ்க்கில்
கால் காணி நிலமாவது வாங்குவது சத்தியம்.

பனிப்பொழிவு தொடர்ந்தது.
உறையணிந்த கைகளில் ஒரு பிடி பனி அள்ளிப் பார்த்தேன்.
விம்மிய நெஞ்சம் சில்லிட்டு அடங்க! பேராசை அற்றுப்போக!
விழிகளின் மீது கொட்டினேன்.
முகம் உறைந்தும் முத்தம் கொடுத்தேன்.

இந்த பனி உருகக்கூடாது.

துரோகம்

நண்ப, நீ என் வீட்டுக்கு வருவதில் சந்தோஷமே.
எனினும் உன் நமட்டுச் சிரிப்புக்கு அஞ்சுகிறேன்.
எனது வேண்டுகோளை நீ புறக்கணிக்காதே.

அந்த ஹாஸ்டல் நாட்களில்
நாம் தனியாத அடித்தக்கூத்துகளைப் பற்றி நினைவு படுத்தாதே.
நாம் வாழ்வது பாலியல் நாட்டம் குறித்த முற்பட்ட கருத்துக்களைக் கொண்டதோர் தேசமல்ல.

எனது மனைவி அதைப்பற்றி தெரியாதிருக்கட்டும்.
எனது அலுவலகத்தில் இனி நான் புது நண்பர்களை ஆக்கிக்கொள்ள மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

அது நன்றாகத்தான் இருந்தது.
எனக்கு கால்கட்டே வேண்டியிராதென்று நினைக்கும் வகையில் நீ என்னைக் காதல் புரிந்தாய்.
எவ்வளவு கெட்ட வார்த்தைகள் நமக்கு தெரிந்திருந்தன!
ஆனால் நாம் சைட் அடித்ததேயில்லை.
பெண்களைக் கண்டால் பெருமிதத்தோடு ஒரு பார்வை.
போங்கடி நீங்கள் இல்லாவிட்டால்…
அவர்கள் போகத்தான் செய்தார்கள்.
உன்னிடமும் என்னிடம் என்ன இருந்தது ஈர்க்க.
நாம் கூட்டுறவு கொண்டோம் நெஞ்சம் கலங்காதிருக்க.

நீ வராமலேயே இருப்பது நன்று எனவும் தோன்றுகிறது.
ஒருவேளை எனது மாப்பிள்ளைப் பொலிவு கண்டு நீயோ
உன் கற்பிழக்கா நிலை கண்டு நானோ மீண்டும் கலந்துரையாடுவோமெனில்.
பேசுவதற்கு என்ன இருக்கிறது? வேண்டாம் துரோகம்.

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால்.
நீ கல்யாணம் செய்துகொள்.

Comments (2)

ஈ மெயில் குறுங்காவியம்

இது தமிழும் ஆங்கிலமும் கலந்த மணிpearlவாள நடையில் எழுதப்பட்டது. ஈ-மெயிலின் மகா மகோன்னதமான பயன்பாடுகள் குறித்து அதன் அருமை அறியாதோர்க்கு தெற்றென விளக்குவான் எழுதப்பெற்றது.

(யாப்பு – ஆசிரியர் வருத்தப்பா)

மஞ்சள்பொட்டு வைத்து மணவிழா அழைப்பிதழை
மங்கலமாய் அனுப்ப வழியற்ற இம்மின்
அஞ்சல்தொட்டு ஆவதென்கொல் எனக்கேட்டாய்.
அடச்சே! டெக்ஸ்ட் பாக்ஸ் பின்புலத்தை மஞ்சள் செய்!
நெஞ்சம் செல்வேகத்தில் மெயில் செல்லும், பெர்சனலாய்
நேருக்கு நேர் பேசல் நிகர்த்த செயல் அன்றோ – உலகக்
கஞ்சர்களின் தவத்தாலே கயிலை சிவன் அருளிய
கில்லர் ஆப் இதுவாம். செலவுக்கு ஸ்டாப் இதுவாம்.

போஸ்ட்மேன் வருகைக்காய் காத்திருந்து பூத்திருந்து
பெற்றக்கடிதத்தை பிரித்து மகிழ்வதும் ஓர்
ஹோஸ்ட் கம்ப்யூட்டர் இணைப்புள்ள ஹோம் பி.சி. இன்பாக்ஸில்
ஓப்பன் செய்வதுவும் ஒன்றா எனக் கேட்பவனே. ம்ஹூம்
வேஸ்ட் நீ! அட்டாச்மென்ட் அட்ரஸ்புக் அறியா அசடன் நீ.
விலைகேட்கா யாஹூ, ஹாட்மெயில் போல் சர்வீஸ் பல இருக்க
காஸ்ட்லி கடிதங்கள், கூரியர்கள் தேடுகிறாய். `கனி யிருப்ப
காய்கவர்ந்த’ குறளுக்கு இலக்கணமோ உன் செய்கை?

செக்ஸ்சைட்கள் புண்ணியத்தால் ஜெகவலை பிரபலமாம்.
ச்சாட் இல்லை என்றால் சைபர்கபேக்களில்லை. அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் ஏறிவரும் எமன்களாய் வைரஸ் தொல்லை -
என்பாய் நீ. எதில் இல்லை பேஜாரு? எக்ஸ்பீரியன் ஸிலாதவனே!
டெக்ஸ்ட் எடிட்டர் திணறுகிற வேகத்தில் சொற்களெல்லாம்
டெலிவரி யாகின்ற மாஜிக்கை உணராமல், புத்தம்புதிய ஈ
புக்ஸ் வந்த காலத்தில் சாணித்தாளில் படிக்கும்
புராதனன் அன்றோ நீ! பூட்ட கேஸ் ஆவாயோ?

சப்ஜெக்ட் லைனிலே தொடங்கிவிடும் சரசங்கள்
ச்சாட்கள் முடிந்துவிடும் முகவரி பரிமாற்றத்தில்
ரிப்ளை செய்பவளின் ரிஷிமூலம் அறிந்திடவும்
ரீல்விடும் ஜொள்ளனின் நதிமூலம் அறிந்திடவும்
அப்ளிகேஷன்கள் உண்டு. அபாயம் ஒன்றுமிலை -
அறுமுகனைப் பெற்றெடுத்த ஆதிசிவன் அருளாலே,
பப்ளிமாஸ் கொத்தவரை பாவையரின் தொடர்பெல்லாம்
ஈ-மெயிலை ஈன்றிட்ட ஈசனவன் வரத்தாலே.

ஸ்மைலிகளில், உணர்ச்சிகளைச் சித்திரமாய் வரைவதற்காய்
ஸ்பீடாக எதிர் வினையை தெளிவாக உரைப்பதற்காய்
அமைதியாய் உட்கார்ந்து அகிலத்தின் பிரச்னைமேல்
ஆழமாய் அகலமாய் பின்னூட்டம் புரிவதற்காய்
ஜமைக்காவின் ஜார்ஜும் ஜப்பானின் டோட்டோவும்
ஜாவா ஸ்கிரிப்ட் நடுவே ஜல்சாக்கள் செய்வதற்காய்
உமைபாகன் எம்பெருமான் சைபரமன் படைத்திட்ட
ஒப்பற்ற ஈ-மெயிலைத் திட்டாதே, தொலைச்சிடுவேன்.

குறிப்பு: வெப்உலகத்தில் இதை முதலி்ல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்வாசனை என்ற தொடரின் ஒரு பகுதியாக எழுதினேன். சிறு திருத்தத்துடன் இப்போது இரண்டாம் படிப்பை வெளியிட்டிருக்கிறேன்.

Comments (8)

இன்னா நாற்பது – லிங்க் பேஜாரு.

எனது சமீபத்தைய இடுகையை தேன்கூட்டில் பிங்க்கிய போது, தப்பாப் போச்சு. எனது வலைப்பதிவகத்துக்கு வந்து இன்னா நாற்பது என்ற சமீபத்தைய பதிவைப் படித்துத் துன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Comment

இன்னா நாற்பது

நேத்திக்கு எம் பொண்டாட்டி என்ன அட்ச்சிட்டா.

இன்னாடா இவன் இதப்போயி இன்னா தேரியமான வலப்பத்திவுள போட்ரானேன்னு பாக்றீங்கோ நீங்கோ. இன்னா தப்பு இதல? அட்சது எம் பொண்டாட்டி. அட்சது என்ன.

இன்னார் இன்னார அட்சாங்கன்னா பின்னால கத இருக்குமில்ல? அது இன்னா மேட்ருன்னு கேளுங்க. நேத்து காலீல வேலிக்கு போவும் போது, இன்னிக்கு சாந்தரம் குடிக்காம வூட்டுக்கு வரேன்னு எம்பொண்டாட்டிக்கிட்ட நேத்து சத்தியம் பண்ணிட்டேன்.

இன்னாமே, நெஜமாலும் உன்னால முடியுமான்னு கேட்டா. ஆம்புள வுடுவனா. முடியும்மே, முடியும். இல்லன்னா நீ இன்னா சொல்றியோ அதே செய்றேன் அப்படின்னு சவாலு வுட்டேன். நாந் தெனங்குடிக்கிற தறுதல.

சாந்தரம் ஆச்சு. இன்னா இருந்தாலும் இன்னிக்கு குடிக்காம போறமே, நம்ல வூட்டுக்காரி மர்வாதையா வாவான்னு சொல்வான்னு நன்ச்சேன். பலானது இன்னிக்கு நல்லா நடக்கும்னு ஆசப்பட்டு, பூ வாங்கினு போலாம்னு நனச்சேன். போற வழில எனக்கு தெரிஞ்ச பூக்காரி – சாமந்தின்னு பேரு – ஒர்த்தி இருக்கா, அவகிட்ட மல்லிப்பூவு வாங்க போனன். ரொம்ப அயகு அந்த பொண்ணு. போம்போது வர்ம்போது ஒரு லுக்கு வுடுவா. சின்னப்பொண்ணு. நல்லா யாவரம் பண்ணுவா.

மல்லிப்பூ கேட்டேன். ஏந்.. தட்ட பாரன். மல்லி இல்லியேன்னா. இது இன்னாடா எழவுன்னு, சரி கெடக்டும் விடு, அது இல்லீன்னா இன்னா, வேற பூவு குடுன்னுபூக்காரி சாமந்தி கிட்டே கேட்டேன். அவோ சாமந்தி பூதான் கீது அப்டின்னா. இன்னா பண்றது? சரி வாங்கலாம்னு பூக்காரிககிட்டே, இன்னா வெலன்னு கேட்டேன். ரொம்ப அதிகமில்ல, உனக்குன்னா கால்ரூபா மொழத்துக்கு கம்மின்னு சொன்னா. இன்னா ஷோக்கா பேசுவா
தெர்யுமா அவ? பூக்காரி மேல எனக்கும் ஒரு இதுதான். இன்னா மேட்டருன்னு கேட்காதிங்க சார். சும்மா ஒரு லுக்குதான்.
அன்னிக்கும் கொஞ்சநேரம் ஜொள்ளு வுட்டுட்டு பூவு வாங்கினு ஊட்டுக்கு கெளம்புனேன்.

போறேய்லோ, பூவு மட்டும் போதுமா, சுவீட்டு வாங்கலாமேன்னு நெனச்சேன். இன்னா சுவீட்டு எம் பொண்டாட்டிக்கு புடிக்கும்னே
இது வரே தெரியாது. இன்னாடா வூட்டுக்காரன் இவன்னு நீங்க கேக்கலாம். ஒம்பொண்டாட்டிக்கு இன்னா சீரியல் புடிக்கும்னு ஒங்கலால சொல்லமுடியும். கேய்வி இன்னான்னா, அவங்குளுக்கு எந்த பக்கத்து வூட்டுக்காரன புடிக்கும்னு ஒங்களால சொல்லமுடியுமா. இன்னா இர்ந்தாலும் முட்யாது.

சரி, சுவீட்டு வாங்க போனனா, அங்க இன்னாடான்னா, இன்னாத்த சொல்றது, இன்னோரு பிரச்னை. நான் ஜாங்கிரி வாங்க போனன். கடக்காரன் இன்னா கேக்கிறான்னா, எந்த காலத்துல கீற நீ, பெங்காலி சுவீட்டு வாங்கிகினு போன்னு கேக்கறான். பெங்காலி சுவீட்டா, அது இன்னான்னே எனக்கு தெரியாது. காக்கிலோ இன்னா ஆவுதுன்னு கேட்டேன். காக்கிலோ காக்காவுக்கு கூட பத்தாது, இன்னா கேட்டியா, அரக்கிலோ வாங்கிக்கோன்னான். சரி, இன்னா வெல அத சொல்லு முதல்லன்னேன். இன்னா இர்ந்தாலும் நம்க்கு கட்டுபடி ஆவணும் இல்லியா? நூர்ரூவான்னான். இன்னாது? ஒரு பச்ச நோட்டு அப்படி புடுங்கறானேன்னு நனச்சேன். சரி நம்ம, அடச்சீ, என் பொண்டாட்டிக்கு தான வாங்கிட்டு போறோம்னு, முழு அம்பது ரூவா நோட்டு ரெண்டு குடுத்து வாங்கனேன்.

வழிலே இன்னாசி அண்ணன பாத்தேன். இன்னாடா பூவும் சுவீட்டுமா போறே, இன்னா விசேஷம்டான்னாரு. இன்னிக்கு குடிக்காம வூட்டுக்கு போறேன், இன்னாசி அண்ணேன்னேன். இன்னாப்பா இது, எப்டி இது முடிஞ்சுதுன்னு அண்ணன் விலாவரியா கேட்கிறாரு. இன்னா சொன்னாலும் நம்பமாட்டேன், வாய வூதுன்னாரு. வூதுனேன். உம்மைதான் போலக்கீதுன்னு சொல்லிட்டு அண்ணன் பூட்டாரு.

வூட்டுக்கு போனன். பொண்டாட்டி ஆளக்காணோம். இன்னாடாது, சவால் வுட்ட புர்சன் வர நேரம் பாத்து வெளியப் பூட்டாளேன்னு நான் பாக்கிறேன். அப்போ இன்னா நடந்தது தெரியுமா? நான் பூ வாங்கினத அவளும் பாத்துட்டா போலக்கீது. நானும் பூக்காரியும் வாய்வுட்டு பேசனத அவ தூரத்திலேந்து பாத்து கெட்ட மாரியா நன்ச்சிகினா போலக்கீது. இதெல்லாம் எனக்கு மொதல்ல தெரியாது.

நான் வந்து வூட்ல போய் ஒக்காந்துகினு இருந்தன். அவ வர்ரது தெரிஞ்சிது. தெருவுல இருந்துகினே கத்திகினே வூட்ல நொழஞ்சா அந்த ராட்சதி.
“டேய் வெக்கங்கெட்டவனே, இன்னாடா நெனப்பு ஒம்மனசில” ன்னு ஆரம்பிச்சா. எனக்கு தூக்கிபோட்சி. இன்னா ஆச்சி இவுளுக்குன்னு. ஆம்புளங்கிறத்தனாலா, கோவமாயிட்டேன். அவ உடல. “இன்னாத்தடா பண்ற உள்ளே”ன்னு அப்புறம் கத்துனா.

நானு வெவரம் புரியாம கையல பூவோடு போய் நின்னன். கிட்ட வந்து, “இன்னா பூவு இது, எனக்கு மல்லிப்பூவுதானே புடிக்கும். உனக்கு தெர்யாதா”ன்னு கேட்டா. இன்னாடா, ஆம்பிளிகிட்டே சர்க்குசமமா பேசறாளேன்னு. “இல்ல, எனக்கு சாமந்திதான் புடிக்கும்னு” ஒளறிட்டேன்.

அவ்ளோதான். அப்புறம், இன்னா நடந்திருக்கும்னு உங்ளுக்கு தெரியாதா இன்னா?.

குறிப்பு: இதே மாதிரி ஒரு இலக்கியத்தை ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி குமுதத்திலோ விகடனிலோ படித்ததாக ஞாபகம். அதை எழுதிய எழுத்தாளருக்கு இது சமர்ப்பணம். ஆனால் இதில் எழுதியிருக்கிற சரக்கு எல்லாம் 100 சதம் என்னுடையதே.

Comments (6)

உலகின் மிகப்பழைமையான காதல் கவிதை

மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…

மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லபடுவேன்
பள்ளியறைக்கு.

சூடேற்றும் வரிகளுடன் தொடங்கும் இந்த கவிதைதான் உலகில் இதுவரை நாமறிந்த காதல் இலக்கியங்களிலேயே மிகவும் பழமையான படைப்பு. இன்றைய ஈராக்கில் – அன்றைய மெசபடோமியாவின் நிப்பூர் என்ற நகர் இருந்த பகுதியில்- 1880 இல் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு டேப்லட்டில் இந்த கவிதை காணப்பட்டது.

அது சுமேரியர்களின் மொழியில் கியூனிபாஃர்ம் எனப்படும் ஆதிகால வரிவடிவத்தில் எழுதப்பட்டது. இப்போது  இப்போது துருக்கியில் இஸ்தான்புல் மியூசியமான The Museum of the Ancient Orient இல் இருக்கிறது.

மேலே உள்ள படத்தில் ஒரு மொபைல் ஃபோன் அளவில் காணப்படும் அந்த டேப்லட்டைப் பாருங்கள்.

பண்டைய சுமேரிய மாநகரமான ஊர் என்ற நகரில் கிறிஸ்து பிறப்பதற்கு 2030 ஆண்டுகளுக்கு முன் இதை எழுதிய ஒரு கவிதாயினி 4000 நம்மை அசரவைக்கிறார்!
முதலில் அந்த கவிதையைப் படியுங்கள், பிறகு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்கிறேன்.

முழு கவிதை இதோ:

மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…

மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.
உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.
மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.
சிங்கமே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

மணவாளனே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

படுக்கையறையில், தேன் சொட்ட
உன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.

சிங்கமே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.
என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.
என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.

உன் ஆன்மா-
உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
மணவாளனே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.
உன் இதயம்-
உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
சிங்கமே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.

நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.
என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,
என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,
நீ என்னை தீண்டி அருள்வாய்.

உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.
உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.
உனது கையை  கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.
கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.

- காமமும் காதலும் ததும்பும் இந்த பாடல்தான் இதுவரை உலக இலக்கியம் கண்ட முதல் காதல் பாடல்.

இந்த டேப்லட்கள் உருவாக்கப்படும் விதம் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். ஈர களிமண்ணை ஒரு சட்டக வடிவில் அமைத்துக்கொண்டு அதன் மீது ஒரு ஸ்டைலஸால் சித்திர எழுத்துக்களான கியூனிஃபார்ம் எழுத்தில் எழுதுவார்கள். பிறகு அந்த களிமண் டேப்லட்டை தீயில் சுடுவார்கள். நம்மூரில் சுடுமண் சிற்பங்களை உருவாக்குவது போல. அந்த சுட்ட சுவடிகள் நெடுங்காலத்துக்கு நிலைத்து நிற்கும்.

அன்றைய சுமேரியத்தில் புனிதத்திருமணம் என்ற விழா நடக்கும். அப்போது சுமேரிய அரசன் சுமேரியர்களின் காதல் மற்றும் யுத்த தெய்வமான இனானாவை ‘திருமணம் செய்துகொள்வான்’. நாட்டின் வளத்தையும் ராஜாவின் ஆண்மையையும் போற்றும் அந்த சடங்கின் ஒரு பகுதியாக இனானாவின் தலைமை பூசாரியாக இருக்கக்கூடிய ஒரு பெண் இனானாவாக தோன்றுவாள். அவனது அழைப்பை ஏற்கும் பெண் பூசாரி ராஜாவோடு படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைத்து, பாடல் ஒன்றையும் இயற்றி பாடுவாள். ஷூ-ஸின் என்ற ஒரு சுமேரிய மன்னனை வேண்டி அழைத்த ஒரு பெண்ணின் பாடல் தான் நீங்கள் படித்தது.

4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆணாதிக்கத்தை மட்டுமல்ல, பெண்கள் கருத்து வெளிப்பாட்டு சுதந்தரத்தையும் இந்த பாடல் காட்டுகிறது. ஆண்மைக்கு முன் மண்டியிடும் பெண்ணின் உடல் பரிசல்ல இந்த கவிதை. ஒரு குறிப்பி்ட்ட வரலாற்று சூழலுக்குள், தங்களுக்கிருந்த வட்டத்துக்குள்ளும், அந்த பெண் பூசாரி தனது உடலைத்தான் கொண்டாடுகிறாள். மெய் தீண்டும் இன்பத்தை அவள் பகிர்ந்துகொள்கிறாளே ஒழிய, தாம்பாளத்தட்டில் வைத்து ராஜாவுக்கு பரிசாக அளிக்கவில்லை.

சுமேரியர்கள் காதலையும் காமத்தையும் பூடமாக்கிவிடவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அரசனும் பெண் பூசாரியும் கலந்தால், நாடு செழிப்புறும் என்று நம்பினார்கள்.

காமத்தை வெளிப்படையாக எழுதிவிட்டார்களே என்று தமிழ் பெண் கவிஞர்களைப் பார்த்து சீறிப்பாய்ந்த இன்றைய ஆண் இலக்கியவாதிகள் அவசியம் படிக்கவேண்டிய கவிதை இது. உலகின் ஆதி காதல் கவிதை இவ்வாறு இருப்பது ஒரு வகையில் கவிதை இலக்கிய வரலாறு சுதந்தரமான பெண் எழுத்தாளர்களின் சார்பாக அளிக்கும் நிரந்தர poetic justice!

Comments (7)

அ-யூனிகோடு

அண்மையில் தமிழ் நாட்டில் உள்ள கணித்தமிழ் அன்பர்கள் சென்னையில் புதிய தமிழ் 16 பிட் எழுத்துரு அமைப்பு ஒன்றை தற்போதுள்ள யூனிகோடு 16 பிட் எழுத்துருவுக்கு மாற்றாக உருவாக்கினார்கள். டேன் என்று அழைக்கப்படும் Tamil New Encoding அந்த புதிய எழுத்துரு முறை விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இதென்ன புதுப்பிரச்னை, இந்த என்கோடிங் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியே கிடையாதா என்று அலறுபவர்கள்தான் அதிகம் என்றாலும்,கணி்த்தமிழர்கள் மீண்டும் பிளவுண்டிருக்கிறார்கள் என்பதே நிஜம்.

கடந்த ஞாயிறன்று இது குறித்து ஒரு நிகழ்வுக்கு தமிழ் இணைய பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

என்கோடிங், யூனிகோடு, பிட் போன்றவற்றைப் பற்றி வகுப்பெடுக்க இந்த வலைப்பதிவில் இப்போது நேரமில்லை. ஆனால், உங்களில் பலருக்கும் அது தெரி்ந்த கதையாக இருக்கும்

என்பதால் அதைப்பற்றி நேரடியாக கொஞ்சம் பார்ப்போம்.

முன்கதைச் சுருக்கம்: முன்னொரு காலத்தில் இந்திய அரசின் மின்னணுவியல் துறை இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவாக ISCII எனப்படும் ஒரு எழுத்துரு குறியீட்டு முறையை உருவாக்கியது. பின்னொரு காலத்தில், உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்குமான எழுத்துக்குறியீட்டு தரப்பாடாக யூனிகோடு உருவானபோது, அந்த அமைப்பி்ன் நெறிமுறைப்படி நாடுகள் ஒவ்வொன்றும் அளித்த தரப்பாட்டின் அடிப்படையில் அது உருவானது. அங்கே தான் சிக்கல், இந்தியாவில்.

புதிய 16 பிட்காரர்களின் வாதம்:

இந்தி மொழியின் வரிவடிவமான தேவநாகரியை அடிப்படையாகக் கொண்டு அந்த இஸ்க்கீ வடிவமைக்கப்பட்டது. அந்த அமைப்பு தமிழுக்கும் வேறு சில இந்திய மொழிகளுக்கும் சரிவர பொருந்தவில்லை. எடுத்துக்காட்டாக, யூனிகோடு தமிழ் அகரமேறிய மெய்யெழுத்துகளை – க, ங, ச, – அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், முறைப்படி க், ங், ச்,.. என்றுதான் வரவேண்டும். சாதாரணமாக இது ஒரு பிரச்னை இல்லை என்று தோன்றும். புள்ளி டைப் பண்ணிகிட்டா போச்சு என்று விடமுடியாத பிரச்னை இது. ஆனால் தமிழ் இலக்கணப்படி உருவாக்கப்படும் இயல்மொழி நிகழ்முறை (natural language processing) செயல்பாடுகளின் போது இது பிரச்னை அளிக்கிறது. நாம் ஏன் தமிழின் இயல்பான இலக்கண அம்சத்தை இழக்கவேண்டும்?

எழுத்துக்களின் வரிசைப் படுத்தம் சரியில்லை. யூனிகோடு தமிழ் அட்டவணையில் ‘ச’-வுக்கு அடுத்து ஜ வருகிறது. இதுவும் தேவநாகரி வரிவடிவத்தின் வரிசையை தமிழ் மீது ஏற்றியதன் விளைவு. இது எல்லாவற்றையும் விட பிரச்னை தமிழ் ஆய்த எழுத்தை தேவநாகரி விஸர்காவுக்கு நிகராக நினைத்து சேர்க்கப்பட்டிருப்பதால் பிரச்னை எழுந்திருக்கிறது.

பிரபலமான யூனிகோடு எழுத்துருவான லதாவில் தமிழை உள்ளிடும் போது ஃ – ஐ டைப் செய்யும்போது  அதற்கு முன் புள்ளிவட்டம் வருகிறதே, பார்த்திருப்பீர்கள். அது இந்த பிரச்னைதான். வேறு ஒரு எழுத்துக்குப்பின்னால் என்றால், அந்த டாட்வட்டம் வராது.இது ஒரு எழுத்துரு வடிவமைப்பு பிரச்னைதான் என்றாலும், அந்த பிரச்னைக்கு காரணமே தேவநாகரி வரிவடிவத்தின் கீழ் இந்திய மொழிகள் அனைத்தையும் கொண்டுவந்ததுதான்.

இந்திய மொழிகளின் வரிவடிவங்களில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. தமிழ்,குருமுகி (பஞ்சாபி) போன்ற வரிவடிவங்களில் இந்தி, வங்காள மொழிகள் போல மெய் கூட்டெழுத்துக்களே (அதாவது, க்க, ங்க, க்‍ஷ போன்றவற்றை தமிழில் தனித்தனி எழுத்துருவாக எழுதுவோம், இந்தியில் என்றால் क्क,क्ष என பாதியெழுத்துக்கூட்டு, முற்றிலும் வேறு எழுத்து கூடடெழுத்தாக வருவதெல்லாம் உண்டு. தமிழில் அப்படி கிடையாது. பிறகு எப்படி இரு தரப்புக்கும் பொதுவான திட்டம் வகுக்கமுடியும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவாக தற்போதைய யூனிகோடு தரப்பாட்டில் ஒரு பிரச்னை இருக்கிறது.ரோமன், சிரிலிக் போன்ற குறைந்த எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்ட மொழிகள் மட்டுமல்ல, சீனம், கொரியன் போன்ற ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட மொழிகளுக்கும் கூட ஒரு எழுத்துக்கு ஒரு குறியீடு என்று நேரடியாக பொருந்துகிற வகையில் யூனிகோடில் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்திய மொழிகளுக்கோ உயிரெழுத்து, உயிர்க்குறியீடுகள், மெய்யெழுத்து மற்றும் சிறப்புக்குறியீடுகளுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளன. உயிர்மெய்யெழுத்து, மெய்-மெய் கூட்டெழுத்து போன்றவற்றுக்கு யூனிகோடில் நேரடியாக இடமில்லை. உதாரணமாக, தமிழுக்கு எடுத்துக்கொண்டால், உயிர் 12, மெய் 18, இதனுடன் கிரந்த எழுத்துகள், ஆய்தம், ஸ்ரீ போன்ற சிறப்பெழுத்துகள் இடம் பெறுகின்றன. கா, கீ, கூ போன்ற உயிர்மெய் எழுத்துகளுக்கு நேரடியாக இடமில்லை. எனவே ஒவ்வொரு கணிப்பொறியிலும் அல்லது மொபைல் போன்ற சாதனங்களிலும் இந்த உயிர்மெய் எழுத்துத் தோன்ற, சிறப்பாக சில மென்பொருள்கள் சேர்க்கப்படவேண்டியிருக்கிறது. உங்கள் இணைய உலாவியில் ரெண்டரிங் எஞ்சி்ன் என்று ஒரு குட்டி மென்பொருள் இடம் பெற்றிருந்தால்தான் நீங்கள் இந்த வலைப்பதிவையே கூட சரியாக படிக்கமுடியும். இல்லையென்றால், க‍ோ, த‍‍ௌ, ப‍ு என்பது போல பார்ப்பீர்கள்.

இப்போது கணி்த்தமிழ் செயல்பாட்டாளர்கள் மேற்கண்ட காரணங்களால் தற்போதுள்ள யூனிகோடு தமிழ் அட்டவணையைத் தவிர்த்து, புதிய தமிழ் அட்டவணை ஒன்றை உருவாக்கி அதை தரப்படுத்தப்பட்ட 16 பிட் வடிவமாக ஆக்குமாறு கேட்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் எழுத்துருவுக்கும் நேரடியாக ஒரு குறியீடு ஒதுக்கவேண்டும். அதுதான் கோரிக்கை.

ஆனால், யூனிகோடு தரப்படுத்த அமைப்பான யூனிகோடு கன்ஸார்ஷியம் இதை ஏற்க மறுக்கிறது. இந்திய மொழிகள் அனைத்துக்கும் உயிர், மெய், உயிர்க்குறியீடு ஆகியவை மட்டுமே அடிப்படை என்றும் உயிர்மெய் எழுத்துகள் மற்றும் கூட்டெழுத்துகள் ஆகியவை டிரைவேட்டிவ்கள்தான் என்பதால் அவற்றுக்கு தனித்தனி இடம் தரவேண்டியதில்லை என்றும் கூறுகிறது.

இந்தியாவின் மற்ற மொழிகளில் அதன் கூற்று சரியாகத்தான் பொருந்துகிறது. இந்த கூட்டத்துக்கு வந்திருந்த, பிரபல இநதிய மொழிகள் எழுத்துரு நிறுவனமான மாடுலர் இன்ஃபோடெக்கின் (ஸ்ரீலிபி மென்பொருள் உருவாக்கியவர்கள்) தலைவர் எம் என் கூப்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். இதெல்லாம் தமிழுக்கு பொருந்தலாம், இந்திக்கு பொருந்தாது என்றார். பெருக்கல் கணக்குப்போட்டுப்பார்த்தால் இந்தியில் 5000 கூட்டு வடிவங்கள் வருகி்ன்றனவாம். தமிழுக்கு வெறும் 300க்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது. எனக்குத் தெரிந்தவரை வங்க மொழியில் இந்த எண்ணிக்கை இன்னும் பல ஆயிரம் கூடும். ஜாங்கிரிஸ்கிரிப்ட் லிபிகளான தெலுங்கு, கன்னடத்திலும், தமிழுஞ்சமற்கிருதமுங்கலந்த மலையாளத்திலும் நிறைய கூட்டக்ஷரங்கள் இருக்கலாம்.

இதெல்லாம் புதியன தேடுவோர் வாதம்.

பழைய 16 பிட் யூனிகோடு ஆதரவாளர்கள் சொல்வது:

டேன்காரர்களின் வாதங்களை யூனிகோடு ஏற்காது. அடிப்படை எழுத்துக்களுக்கு உள்ள இடமே போதும். இல்லையென்றால், இந்திய மொழிகள் அனைத்திலும் இது புதிய பூகம்பமாக மாறும். அதுமட்டுமல்லமால் 2000 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய யூனிகோடு அடிப்படையில் நிறைய மென்பொருள்கள் உருவாகிவிட்டன. ஆபரேட்டிங் சிஸ்டம் உதவி உருவாகியிருக்கிறது. இப்போது மீண்டும்போய் இதெல்லாம் மாற்றமுடியாது.அது மட்டுமல்லாமல், புதிய டேன் எழுத்துரு தொகுப்பை யூனிகோடின் தனியார் பிராந்தியத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். இது தீர்வு அல்ல. எல்லாம் சரி. தொண்ணூறுகளில் இஸ்க்கீ உருவான போதே இந்த பிரச்னைகளை இனம்கண்டு தீர்வு சண்டை போட்டிருக்கவேண்டும்.
பழைய யூனிகோடின் ஆதரவாளர்களை status quoists என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், தற்போதைய முறையில் ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து மென்பொருள் தீர்வுகளை உருவாக்கியிருக்கின்றன. நோகியா செல்பேசியில் உள்ள தமிழும் யூனிகோடு அடிப்படையிலானது.

அப்புறம் இந்திய வரிவடிவங்களில் தமிழும் ஒன்று இல்லை என்பது போல பேசக்கூடாது. அது இந்திய மொழிகளுக்காக கணிப்பொறி நிறுவனங்கள் அளிக்கும் தீர்வுகளையும் தமிழுக்கு நிறைய மென்பொருள்கள் உருவாகும் வாய்ப்பையும் பறிக்கும்.

இப்போது இருப்பதில் எந்த பெரிய பிரச்னையும் இல்லை.

நம்ம கருத்து:

தமிழுக்கு நீதி கிடைப்பது X இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது என்ற இரண்டு எதிர்வுகளில் சிக்கி்க்கொண்டிருக்கிறது இந்த பிரச்னை. தொடக்கத்திலேயே நம்மவர்கள் விழித்திருந்தால் தமிழ் வழமையான இண்டிக் ஸ்கிரி்ப்ட் இல்லை, வித்தியாசமானது என்று சொல்லி தேவையானதை வாங்கியிருக்கலாம்.

வெறும் எழுத்துரு, டிடிபி என்று பார்க்காமல், கணித்தமிழ் வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் தற்போதுள்ள யூனிகோடு பித்தளையாக இளித்துவிடும் என்கிற குற்றச்சாட்டு உண்மையாக ஆகலாம்.

உண்மையிலேயே, இது தர்மசங்கடமான நிலை. ஆனால், இந்த பிரச்னையை தற்போது ஒரு குறுகிய வட்டத்தில் மட்டும் விவாதி்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் இணைய மாநாடுகளும் ஏற்கனவே ரொம்ப அரசியல்மயமாகிக் கிடப்பதால், நாம் தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டேயிருப்போம் என்றுதான் தெரிகிறது.

வலைப்பதிவர்களே, இது குறித்து ஏதாவது செய்தாகவேண்டும். கூட வறீங்களா?

வால்: ஞாயிறன்று நடந்த இந்த கூட்டம் சுவாரசியமாகத்தான் இருந்தது. சண்டையை சீ்க்கிரம் முடித்துக்கொண்டு முடிவுக்கு வாருங்கள் என்று பேராசைப்பட்டார் மத்திய தகவல்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன்.

இது போன்ற விவாதங்கள் எல்லாம் இந்தியில் நடக்கவில்லையா என்று கேட்டதற்கு,நீங்கள் எல்லாம் அதி்ர்ஷ்டசாலிகள் என்றார் மாடுலர் இன்ஃபோடெக் கூப்பர். You own your script. Nobody owns Devanagari script. Neither UPwaalaas, nor Rajasthanis, nor Biharis, nor Maharastrians, nor…

கூப்பர் ஐயா, நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி.

Comments (23)

Hello world – ஏழெட்டு தமிழ் மொழிபெயர்ப்புகள்

Hello world என்கிற இந்த கம்ப்யூட்டர் யுக பிள்ளையார் சுழியை எப்படி தமிழ்ப்படுத்தலாம் என்று பார்த்தால், ஹலோ உலகமே என்று ஒத்தைக்கு ஒத்தை மாற்றினால் தொடக்கமே கடுப்பாகிவிடுகிறது. ஆகையில், அக்கம் பக்கத்தில் சிலரைக் கேட்கலாம் என்று யோசிக்கிறேன். முன்னதாக சில அனுமானங்கள்.

  • அரசியல்வாதி அத்திப்பட்டியார் மொழிபெயர்த்தால் – பெரியோர்களே, தாய்மார்களே
  • பேட்டை பெரிசு மொளிபெயர்த்தது – இன்னா நைனா பூலாமா
  • என் தூரத்து தாத்தாவின் மொழியாக்கம் - திருச்சிற்றம்பலம் (எதற்கெடுத்தாலம் இவர் தொடக்கத்தில் இப்படித்தான் ஆரம்பிப்பார். இவர் அரசாங்கத்தை ஏமாற்றி 65 வயது வரை ஆசிரியர் பணியில் இருந்ததால் மக்கள் இவரை திருட்டுச்சம்பளம் என்றே கூப்பிடுவார்கள்).
  • கவிஞர் ப்ரியபாரதி324 மொழிமாற்றியது – ஹே! லோகசஹியே!
  • கவியரசர் திரைப்பாடியின் மொழிபெயர்ச்சி – அன்பே, அகிலமே (அ) உலகே உன்னை அழைககிறேன்.
  • தனித்தமிழ் மொழிபெயர்ப்பாளர் தமிழ்வளவேங்கையின் மொழிபெயர்ப்பு – ஏலா, உலகம்! (ஹலோ என்ற ஆங்கிலச்சொல் ஏலா என்ற தமிழ்ச்சொல்லின்கண் பிறந்தது. உலகம் என்ற சொல் லோகம் என்ற வடமொழியின் தமிழ் வடிவமாயினும் அஃது உலை+அகம் என்ற சொற்களின் மரூஉ ஆகும். எவ்வாறு உலையினின்று பிற பொருள்கள் தோற்றுவிக்கப்படுவோ, அது போல இஃது தொல் உலையாகும். இவ்வகத்தினின்றே பிற உயிரிகள் தோன்றின என்மனார் புலவர்).
  • கணித்தமிழ் நண்பர் கரிகாலன் மொழிமாற்றம்: ஹலோ வேர்ல்டு

இப்படித்தான் நடக்கும் என்ற அனுமானத்தில் இருக்கிறேன். உங்கள் அனுமானங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் எப்படி இருககும்?

எனது இணையாக்கம்  இது – ஹலோ, அமெரிக்கா!
 

Comments (8)